ஞாயிறு, 31 மார்ச், 2013

பிஜேபியை கைப்பற்றினார் நரேந்திர மோடி!



நரேந்திர மோடி பிஜேபியின் பார்லிமென்டரி போர்டில்  உறுப்பினராக ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். வரும் பொது தேர்தலில் பிஜேபி கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் அதிகாரம் படைத்ததாக இக்குழு உள்ளது.  எனவே வரும் தேர்தலில் பிஜேபி எடுக்கும் முக்கிய முடிவுகளில் மோடியின் ஆதிக்கம் நிறையவே இருக்க வாய்ப்பிருக்கிறது.  அதே நேரத்தில் பிஜேபியில் மோடியின் ஆதிக்கம் இப்போதே கொடிகட்டி பறப்பதை நாம் உணர முடிகிறது. 

மோடியின் நெருங்கிய கூட்டாளியான அமித் ஷா இக்குழுவில் இடம் பெற்றுள்ளது பலருக்கு வியப்பை அளித்துள்ளது. இந்த அமித் ஷா 2005 – ஆண்டில் நடைபெற்ற சொராபுதீன்  ஷேக்  போலி என்கௌண்டர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். அதனாலேயே தான் வகித்து வந்த குஜராத் உள்துறை மந்திரி பதவியையும் இழந்தவர். தற்போதும் இவர் மீது ஆள் கடத்தல், கொலை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெயிலில்தான் தற்போது இருந்து வருகிறார்.  இவர் பிஜேபி கட்சியின் பார்லிமென்டரி போர்டில் உறுப்பினராக சேர்க்கப்பட்டது மோடி கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் என்பதில் எவ்வித சந்தேகமில்லை. பிஜேபியில் மோடியின் ஆதிக்கமும், செல்வாக்கும் தவிர்க்க முடியாததாக இருப்பதையே அமித் ஷாவின் நியமனம் காட்டுகிறது.

பிஜேபியில் மோடிக்கு இணையாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹானுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் மற்றும் சௌஹானை பார்லிமென்டரி போர்டு உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற அத்வானியின் கோரிக்கை பிஜேபியில் மற்ற எந்த தலைவராலும் ஆதரிக்கப்படவில்லை. ஒரு காலத்தில் அத்வானி Vs மோடி என்று கருதப்பட்ட போட்டியை அத்வானி Vs மற்ற பிஜேபி தலைவர்கள் என்று மோடி புத்திசாலித்தனமாக திசை திருப்பியுள்ளார்.  இது  பிஜேபியில் தனக்கு இருந்த எதிரிகளை மோடி வெற்றிகரமாக வீழ்த்தி வருவதைத்தான் காட்டுகிறது. ஏற்கனவே பிஜேபியின் தனிப்பெரும் தலைவராக தன்னை முன்னிறுத்துவதில் வெற்றி கண்டு வரும் மோடி, வரும் மக்களவை தேர்தலில் இந்திய  அரசியலிலும்  தான் ஒரு சக்தி மிக்க தலைவர் என்ற சாதனையை நிகழ்த்த நினைக்கிறார். கட்சியை கைப்பற்றிய மோடி ஆட்சியை கைப்பற்றுவாரா?. பொறுத்திருந்து பார்ப்போம்.
More than a Blog Aggregator

சனி, 30 மார்ச், 2013

நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!?



மக்களவை தேர்தல் நெருங்குகின்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும்  தங்களது பிரதம வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் இறுதி கட்ட முயற்சிகளில் உள்ளன.

பிஜேபி தனது பிரதம வேட்பாளராக நரேந்திர மோடியை  அறிவிப்பது எனபது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அவ்வாறு மோடியை அறிவிக்கும் நிலையில் நிதிஷ் குமாரின் ஆதரவை இழப்பதற்கும் பிஜேபி தயாராகிவிட்டது. மோடியின் பெயரை பிஜேபி அறிவிப்பதற்கு முன்னரே கூட கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலக வாய்ப்புள்ளதாக சிலர் கருதுகிறார்கள். . ஆனால் மோடியின் பெயரை பிஜேபி வெளியிட்ட பின் அதனை காரணம் காட்டி கூட்டணியில் இருந்து விலகினால் முஸ்லிம்களின் ஆதரவை பெறலாம் என நிதிஷ் குமார் திட்டமிட நிறைய வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நடக்கவே நிறைய வாய்ப்புள்ளதாகவும்  நான் நினைக்கிறேன். எனவே பிஜேபியின் தேர்தலுக்கு முந்தைய பிரதமர் வேட்பாளர் மோடி என்பது கிட்டத்தட்ட நூறு சதவிகிதம் உறுதியாகிவிட்டது. அதற்காக சில கூட்டணி கட்சிகளை இழக்கவும் அது தயாராகிவிட்டது. தேர்தலுக்குப்பின் பிஜேபியும், அதன் கூட்டணி கட்சிகளும் பெறும் இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் பிரதமர் வேட்பாளரின் பெயர் மாறுவதற்கும் நிறைய வாய்ப்புள்ளதாக நினைக்கிறேன். தேர்தலுக்குப்பின் மேலும் சில கட்சிகளின் ஆதரவை பெற வேறு ஒரு மிதவாத முகம் கொண்ட பிஜேபி தலைவர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட நிறைய வாய்ப்புள்ளது.

காங்கிரசை பொறுத்தவரையில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படலாம் என்று பலர் கருதுகிறார்கள். இக்கருத்தினை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.  காங்கிரஸ் கூட்டணிக்கு உறுதியான வெற்றி வாய்ப்பு இருந்தால் மட்டுமே ராகுல் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்படலாம். ஆனால் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வாய்ப்புக்கள் மங்கிய நிலையில் உள்ளன.  அப்படிப்பட்ட நிலையில் மூழ்கும் கப்பலுக்கு கேப்டனாக பொறுப்பேற்க ராகுல் விரும்பமாட்டார். மோடியிடம் தோற்று தனது இமேஜை அரசியலின் ஆரம்ப கட்டத்திலேயே கெடுத்துக்கொள்ள ராகுல் விரும்ப மாட்டார். தோல்வியின் விளிம்பில் உள்ள காங்கிரசை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் சக்தி ராகுலுக்கு கிடையாது என்பதை கடந்த கால தேர்தல்கள் உறுதிப்படுத்திவிட்டன. ஆயினும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மையை அளித்தால் அந்த நிலையில் ராகுல் பிரதமராக அறிவிக்கப்பட வாய்ப்புண்டு.

எனவே வழக்கம் போல் தேர்தலுக்கு முன் மன்மோகன் சிங் போன்ற யாரேனும் ஒரு கைப்பாவை பிரதமர்  வேட்பாளராக அறிவிக்கப்படலாம். தனக்கு மூன்றாவது முறையாக பிரதமர் பதவி வகிக்க ஆசை உண்டு என்பதை மன்மோகன் சிங் வெளிப்படையாக அறிவித்துவிட்டார். ஆனால் காங்கிரஸ் அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க சிறிதும் வாய்ப்பு இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஏற்கனவே அடிமட்டத்திற்கு போய்விட்ட காங்கிரசின் இமேஜை காக்க வேறு யாரேனும் ஒருவர் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்படலாம். அது சோனியா காந்தி வீட்டு சமையல்காரனாகவோ அல்லது தோட்டக்காரனாகவோ கூட இருக்கலாம். அதாவது புதிய மொந்தையில் பழைய கள் என்பது காங்கிரசின் ஏமாற்றும் திட்டமாக இருக்கலாம். அல்லது டைம் பத்திரிகை கூறியுள்ளது போல் அந்த வேட்பாளர் ப. சிதம்பரமாக கூட இருக்கலாம். ஈழப் பிரச்சினையில் தமிழ் நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என்ற குற்றச்சாட்டை தேர்தலின் பொது எதிர்கொள்ள அது உதவலாம் என காங்கிரஸ் நினைக்கலாம். தமிழ்நாட்டில் சில கூட்டணி கட்சிகள் கிடைக்க இத்திட்டம் உதவும் என்றும் காங்கிரஸ் திட்டமிடலாம்.

எனவே வரும் மக்களவை தேர்தலில் பிரதம வேட்பாளருக்கான போட்டி நரேந்திர மோடி Vs ப. சிதம்பரம் என்று இருக்கவே நிறைய வாய்ப்புண்டு. ஆனால் தேர்தலுக்குப் பின் பிரதமர் போட்டிக்கான பெயர்கள் மாற நிறைய வாய்ப்புகளும் உள்ளது. அப்படியானால் தேர்தலுக்கு முன் இக்கட்சிகள் மக்களுக்கு அளித்த பிரதம வேட்பாளர் குறித்த உறுதிமொழிகள்  என்னவாகும்?. தேர்தல் அறிக்கைகள் போன்றே அதுவும் காற்றோடு பறக்கவிடப்படும்.
More than a Blog Aggregator

வெள்ளி, 29 மார்ச், 2013

பாலிடிக்ஸ் 'பவர் ஸ்டார்' தங்கபாலு!


நன்றி:envazhi.com

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி தங்கபாலுவின் பேட்டியினை ஒளிபரப்பினார்கள். கேள்விகளுக்கு வழக்கம்போல் சம்பந்தம் இல்லாமல் பதில் சொல்லி காமெடி செய்துகொண்டிருந்தார் தங்கபாலு. பேட்டியின்போது  ராபர்ட் வதேராவின் நில மோசடி  ஊழல் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று தங்கபாலுவை நோக்கி பேட்டியாளர் ஒரு கேள்வியினை கேட்டார். அக்கேள்விக்கு தங்கபாலு கூறிய பதில்தான் காமெடியின் உச்சகட்டமாக இருந்தது. அவர் கூறிய பதில் இதுதான்.

தான் சட்டத்திற்கு புறம்பாக எந்த செயலையும் செய்யவில்லை என்று வதேராவே  கூறிவிட்டார். தான்  எந்த இடத்தையும் சட்ட விரோதமாக வாங்கவில்லை என்று அவரே தெரிவித்து விட்டதால் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஊழல் நடைபெறவில்லை என்று தங்கபாலு சிரிக்காமல் கூறினாலும் நம்மால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.


வதேராவே ஊழல் நடக்கவில்லை என்று சொல்லிவிட்டாராம். எனவே ஊழல் நடக்கவில்லை என்று தங்கபாலு வதேராவிற்கு சான்றிதழ் கொடுக்கிறார். ஊழல் வழக்கில் வதேரா ஒரு குற்றவாளி. ஒரு குற்றவாளி தான் தவறு செய்யவில்லை என்று கூறிவிட்டால் அதனை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமாம். இது தங்கபாலுவின் தீர்ப்பு! எனவே கொலை வழக்கில் குற்றவாளி தான் கொலை செய்யவில்லை என்று கூறிவிட்டால் நீதிபதி அவனை விடுதலை செய்யவேண்டியதுதான். இதுதான் தங்கபாலுவின் நீதி!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானம்  பவர் ஸ்டாரை பார்த்து நானாவது காமெடியன்னு தெரிஞ்சி காமெடி பண்றேன். ஆனா நீ ஒரு காமெடியன்னு தெரியாமலேயே காமெடி பண்றியே என்று ஒரு டயலாக் சொல்வார். உண்மையிலேயே தங்கபாலுவின் பதிலைக் கேட்டபோது  எனக்கு இந்த டயலாக் தான் ஞாபகம் வந்தது.

இவர்கள் எல்லாம் மக்களை முட்டாள்களாக நினைக்கிறார்களா? அல்லது  உண்மையில் இவர்கள்தான் முட்டாள்களா?
More than a Blog Aggregator

வியாழன், 7 பிப்ரவரி, 2013

ட்விட்டர் ஹேக்கிங் - பின்னணியில் சீனாவின் சதி!



படம்:Google
ட்விட்டர் தளத்தை ஹேக்கிங் செய்து சுமார் 2,50,000 நபர்களது அந்தரங்க தகவல்களை ஹேக்கர்கள் திருடியதின் பின்னணியில் சீனாவின் சதி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. 

சென்ற வாரத்தில் ட்விட்டர் சமூக தளம் ஹேக்கர்களால் தாக்கப்பட்டு சுமார் 2,50,000 நபர்களது user names, ஈ-மெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்டுகள் ஆகியவை திருடப்பட்டன. அமெரிக்க நாளிதழ்களான நியுயார்க் டைம்ஸ், த வால் ஸ்ட்ரீட் ஜர்னல், த வாஷிங்டன் போஸ்ட் ஆகியவை தங்களது தளங்கள் சமீப காலமாகவே மிகப் பெரிய சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்துள்ளன. இத்தகைய தாக்குதலுக்கு பின்னணியில் சீனா இருப்பதாக இப்போது மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கென மிகப்பெரிய ஹேக்கர்ஸ் படை ஒன்றினை சீன அரசு ரகசியமாக உருவாக்கி உள்ளதாக இதனால் பாதிக்கப்பட்ட நாடுகள் நம்புகின்றன. இந்த ஹேக்கர்ஸ் படை  மேற்கத்திய நாடுகளின் மிகப்பெரும் நிறுவனங்களின் வியாபார ரகசியங்களை கண்டுபிடிப்பது மட்டுமில்லாமல் முக்கியமான பத்திரிக்கையாளர்கள், சீன அரசின் எதிர்ப்பாளர்கள ஆகியோரது ரகசியங்கள், பிற நாடுகளின் ராணுவ ரகசியங்கள் ஆகியவற்றை உளவு பார்ப்பது போன்ற வேலைகளையும் செய்கின்றன.  சீன அரசு மேற்கண்ட குற்றச்சாட்டுக்களை மறுத்த போதிலும், இது போன்ற ஹேக்கிங் குற்றங்கள் சீனாவிலிருந்தே செயல்படுத்தப்படுவது போல் தோன்றுகின்றன என்று பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

2010 ஆம் ஆண்டிற்கான பிரிட்டனின்  Strategic Defence Review அறிக்கையில் சைபர் தாக்குதல் என்பது நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரும் ஆபத்தாக உள்ளது  என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.  வழக்கமான பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது போன்று சைபர் போருக்கு எதிராகவும் நாம் போராட வேண்டியுள்ளது  என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குனர் பாப் லார்ட் தெரிவிக்கையில் ட்விட்டர் சமூக தளம் மீதான தாக்குதல் ஏதோ பொழுதுபோக்கிற்காக செய்யப்பட்டது அல்ல என்றும், இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மிகுந்த திறமைசாலிகள் என்றும், இதை தனித்த ஒரு சம்பவமாக தாம் கருதவில்லை என்றும், ட்விட்டர் போன்று பிற நிறுவனங்களும் இது போன்ற தாக்குதலுக்கு தற்காலத்தில் உள்ளாகியிருக்கலாம் என்றும் தெரிவித்தார். அதனாலேயே தம் நிறுவனத்தின் மீதான தாக்குதலை வெளிப்படையாக தெரிவித்ததாகவும், தாக்குதல் குறித்த தகவல்களை தற்போது திரட்டிவருவதாகவும்,  இது குறித்த புலன் விசாரணையில் அரசாங்கத்திற்கும், பெடரல் லா என்போர்ஸ்மென்ட் அமைப்பிற்கும் உதவி வருவதாகவும், குற்றவாளிகளை தண்டித்து பாதுகாப்பான இணையத்தை பயன்பாட்டாளர்களுக்கு வழங்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

கூகிள் நிறுவனத்தின் எக்ஸிக்யுடிவ் சேர்மன் எரிக் ஸ்மித்  தற்போது எழுதிக்கொண்டிருக்கும் புத்தகமான The Digital Age புத்தகத்தில் சீனாவின் ஹேக்கர்கள் எவ்வாறு உலகிற்கு மிகப்பெரும் ஆபத்தாக உருவாகி வருகிறார்கள் என்பதை விவரித்துள்ளதாக கூறப்படுகிறது. சீனாவை மையமாகக் கொண்ட சைபர் குற்றங்கள் உலகம் முழுமைக்கும்  பேரழிவாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலகிலேயே திறமை வாய்ந்த ஹேக்கர்கள் உள்ள நாடாக சீனா உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார். சீனாவின் கணினி சார்ந்த தொழில் நுட்பங்கள் மற்றும் உபகரணங்கள் தற்போது உலகம் முழுவதும் அதிக அளவில் விற்பனையாகி வருவதால் சீனாவை சேர்ந்த ஹேக்கர்களுக்கு  ஹேக்கிங் செய்வது என்பது மிகவும் எளிதான செயலாக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


நியுயார்க் டைம்ஸ், த வால் ஸ்ட்ரீட் ஜர்னல்  ஆகிய பத்திரிக்கைகள் தங்கள் மீதான சைபர் தாக்குதல் என்பது சீனாவை விமர்சிக்கும் பத்திரிக்கையாளர்களை உளவு பார்ப்பதற்கான முயற்சியே  என்று குற்றம் சாட்டியுள்ளன. சீனாவின் வருங்கால அதிபராக கருதப்படும் ஷி ஜின்பிங்கின் உறவினர்கள் ஆச்சரியமூட்டும் வகையில் சொத்து சேர்த்துள்ளது பற்றிய செய்தி தொகுப்பை வெளியிட்டவுடன், அடுத்த கணமே தனது தளம் ஹேக்கிங் செய்யப்பட்டதாக Bloomberg Financial News  தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் மீது மிகப்பெரும் சைபர் தாக்குதலை தொடுத்து வரும் சீனா தனது நாட்டில் சைபர் பாதுகாப்பை வலிமையாக வைத்துள்ளது. அது தனது மக்களுக்கு சுதந்திரமான இணையத்தை வழகுவதில்லை. சமூக வலைத்தளங்களுக்கு அனுமதியளித்தால் அரபு நாடுகளில்  ஜனநாயகத்திற்கு ஆதரவான புரட்சி வெடித்தது போன்று சீனாவிலும் புரட்சி வெடித்துவிடும் என்று சீன அரசு அஞ்சுவதாலேயே அது Twitter மற்றும் Facebook தளங்களை தடை செய்துள்ளது. சுதந்திரமான இணையம் என்பது சீனாவின் கம்யுனிச கோட்டையை தகர்த்துவிடும் என்று சீன அரசு உறுதியாக நம்புகிறது. சீனாவின் சொந்த சமூக வலைத்தளமான வெய்போ (Weibo) வில் மட்டும் சுமார் 1,000 பேர் சென்சார் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தினசரி சீன அரசுக்கு எதிரான 10 மில்லியன் செய்திகளை வெய்போ தளத்திலிருந்து நீக்குகின்றனர். கம்யுனிசத்திற்கு ஆதரவாக இணையத்தில் பதிவுகளை வெளியிட 3,00,000-க்கும் மேற்பட்ட சீனர்கள்  சம்பளத்திற்கு  நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க உளவுத்துறையினர் சீனாவின் சைபர் போரிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள தங்கள் நாட்டின் தலை சிறந்த கணினி நிபுணர்களை பணியில் அமர்த்தியுள்ளனர். ஏனென்றால் வருங்காலத்தில் இரு நாடுகளுக்கிடையேயான போர் என்பது போர்க்களத்தில் வழக்கமான ஆயுதங்களுடன் நடைபெறுவதாக இருக்காது. உதாரணமாக அமெரிக்கா ஒரு நாட்டின் மீது தாக்குதல் தொடுத்தால், எதிரி நாடு பதிலடியாக இணையத்தை பயன்படுத்தி அமெரிக்காவின் தேசிய மின்சார கிரிட்டை அல்லது நீர் விநியோகத்தை தடை செய்ய முற்படலாம். 

உலகத்திலேயே தனது நாட்டின் பரப்பை விரிவுபடுத்தும் ஆசை அதிகம் கொண்ட நாடு சீனாதான். தன் ஆசையை வெறும் கனவாக கொண்டிராமல் அதனை செயல்படுத்தும் திட்டத்தையும் சிறிது சிறிதாக சீன அரசு கவனமாக செய்து வருகிறது. சீன அரசு தொடங்கி இருக்கும் சைபர் போர் (cyber war) என்பது அதில் ஒரு வகைதான். பல நாடுகள் அணு ஆயுதங்களை கொண்டிருக்கும் நிலையில், வருங்காலத்தில் போர் என்பது வழக்கமான ஆயுதங்களை கொண்டு நடக்க வாய்ப்பில்லை. செலவில்லாமல், ரத்தம் சிந்தாமல் இணையத்தின் மூலம் ஒரு நாட்டை பொருளாதார ரீதியாக முடக்கும் சைபர் போர் மட்டுமே எதிர்காலத்தில் நடக்கும். சீனாவின் சைபர் போரை எதிர்கொள்ள அமெரிக்கா,  பிரிட்டன் போன்ற நாடுகள்  தயாராகி வருகின்றன. அதுபோல இந்தியாவும் சைபர் துறையில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது. ஏனென்றால்  நான் அடிக்கடி கூறுவது போல் இந்தியா தனது முதல் எதிரியாக கருதவேண்டியது சீனாவைத்தான். பாகிஸ்தானை அல்ல. சீனாவின் நவீன தொழில் நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தியாவும் தன்னை நவீனபடுத்திக்கொள்ள விடும். இல்லாவிடில் 1962 –ல் நடந்த வரலாறு மீண்டும் நடப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். வரலாற்றிலிருந்து நாம் பாடம் படித்துக்கொள்ளவேண்டும். தவறினால் ஏற்படும் இழப்புகள் அதிகமாக இருக்கலாம்.
More than a Blog Aggregator

சனி, 2 பிப்ரவரி, 2013

கார்கில் போர்: வெளிவந்த உண்மையும், வெளிவராத மர்மங்களும்!


கார்கில் போர் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அப்போதைய பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் முஷராப் ஹெலிகாப்டர் மூலம் இந்திய எல்லையை (Line of Control) கடந்து இந்திய பகுதிக்குள் 11 km தூரத்திற்கு  நுழைந்ததாகவும், அந்த பகுதியில் ஒரு நாள் இரவு முழுக்க தங்கி இருந்ததாகவும் முன்னாள் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி Col (retd) அஷ்பக் ஹூசைன் தற்போது தெரிவித்துள்ளார். மார்ச் 28, 1999 அன்று மேற்கண்ட சம்பவம் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அப்போது முஷாரப்புடன் பிரிகேடியர் மசூத் அஸ்லம் உடன் இருந்ததாகவும், அவர்கள் சிக்ரியா முஸ்தாகர் என்னும் இடத்தில் அன்றைய இரவை கழித்ததாகவும், மறுநாள் முஷராப் பாகிஸ்தான் எல்லைக்கு திரும்பியதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார். அவர்கள் தங்கிய இடத்தில் ஏற்கனவே Col அம்ஜத் ஷபிர் தலைமையில்  பாகிஸ்தானிய ராணுவம் முகாமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹூசைன் இச்செய்தியை ஏற்கனவே 2008 ல் வெளியிடப்பட்ட  தனது புத்தகமான  Witness to Blunder: Kargil Story Unfolds ல் தெரிவித்திருந்தார். அவர் வியாழக்கிழமை அன்று ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலும் இதே கருத்தை வலியுறுத்தினார். கார்கில் போர் முஷராப் தலைமையில் நான்கு ஜெனரல்களால் திட்டமிடப்பட்டது என்று  Lt Gen. (retd) ஷாஹித் ஆஷிஸ் கூறியது பற்றி கருத்து கேட்ட போது ஹூசைன் இவ்வாறு தெரிவித்தார்.

டிசம்பர்  18, 1998, அன்று  பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு பிரிவு  முதன் முதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகவும், அதன் பின் மற்ற பிரிவுகள் LoC யை கடந்து இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க ஆணையிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய பகுதிக்குள் முன்னேற பாகிஸ்தான் ராணுவ பிரிவுகள் ஒவ்வொன்றும் போட்டிபோட்டன என்றும்  அவர்  கூறியுள்ளார்.

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி இந்திய பகுதிகளை ஆக்கிரமித்த செய்தி முதன் முதலாக ஒரு ஆடு மேய்ப்பவரால் மே 3 , 1999 அன்று இந்திய ராணுவத்திற்கு தெரிவிக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

இது பற்றி இந்திய ராணுவ முன்னாள் தலைமை தளபதி V K சிங் கருத்து தெரிவிக்கையில் தான் ஒரு ராணுவ தளபதி என்ற முறையில் இந்திய எல்லைக்குள் 11 km தூரம் வரை வந்த முஷாரபின் துணிச்சலை தாம் பாராட்டுவதாகவும், ஏனென்றால் அது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அதிபயங்கரமான ஒரு காரியம் என்றும் அவர் கூறினார். ஆனால் அதே சமயத்தில் இந்திய தரப்பிலும் சில தவறுகள் நடந்துள்ளன என்றும், பாகிஸ்தானிய ராணுவம் இந்திய பகுதிக்குள் அவ்வளவு தூரம் நுழைய எவ்வாறு அனுமதிக்கப்பட்டது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

கார்கில் போர் முஜாகிதீன்களால் நடத்தப்பட்டது என்று தொடக்கத்தில் பாகிஸ்தான் பொய் பிரச்சாரம் செய்து வந்தது.. அப்போரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை என்றும் தொடர்ந்து பொய் கூறி வந்தது. ஆனால் கார்கில் போர் என்பது பாகிஸ்தான் ராணுவத்தினரால்தான்  நடத்தப்பட்டது என்ற உண்மை தற்போது பாகிஸ்தான் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. பாகிஸ்தான் தொடர்ந்து பொய்களை கூறிவரும் ஒரு  ஏமாற்று நாடு எனபது இதன் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. மேற்கண்ட பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் அறிக்கையை அதற்கான ஒப்புதல் வாக்குமூலமாகத்தான் பார்க்க வேண்டும். கார்கில் போர் பாகிஸ்தான் ராணுவத்தை பொறுத்தவரையில் வெற்றி என்றும், ஆனால் அரசியல் ரீதியாக தோல்வி என்றும், நவாஸ் ஷெரிப் அப்போது அமெரிக்காவிற்கு செல்லாமல் இருந்திருந்தால் கார்கில் போரின் முடிவு வேறாக இருந்திருக்கும் என்றும் முஷரப் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
  
கார்கில் போர் குறித்து விடை கிடைக்காத கேள்விகளும்  சில உண்டு. 

1) டிசம்பர்  18, 1998 அன்று இந்திய எல்லைக்குள் முதன்முதாலாக பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. மார்ச்28, 1999 அன்று அப்போதைய பாக். ராணுவ தளபதி முஷராப் இந்திய எல்லைக்குள் 11 km தூரம் ஊடுருவி ஒரு நாள் இரவு தங்கி சென்றுள்ளார். கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பின்னரே (மே 3 , 1999 ) பாக். ராணுவத்தின் நடவடிக்கை இந்திய ராணுவத்திற்கு தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் நம் உளவு நிறுவனங்களுக்கு தெரிந்து நடந்ததா அல்லது தெரியாமல் நடந்ததா?.

2)  பாக். ராணுவத்தின் நடவடிக்கை குறித்து அரசு முன்னரே அறிந்திருந்தால் ஏன் இந்திய ராணுவம் தன் நடவடிக்கையை உடனே  தொடங்கவில்லை?. பாக். ராணுவம் தொடர்ந்து முன்னேற ஏன் அனுமதிக்கப்பட்டது.? இதில் ஏதாவது ராஜ தந்திர நடவடிக்கை உள்ளதா?. அவ்வாறு ராஜ தந்திர நடவடிக்கை என்றால் அதனால் இந்தியா பெற்ற பலன் என்ன?.  இந்திய ராணுவத்தின் தாமதமான நடவடிக்கையால் ராணுவ வீரர்களின் உயிரிழப்பு அதிகரித்ததுதான் உண்மை. 

3) உளவு நிறுவனங்களுக்கு பாக். ராணுவத்தின் நடவடிக்கை தெரிந்திருக்கவில்லை என்றால் அவைகளின் தோல்விக்கு காரணம் என்ன?. உளவு நிறுவனங்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்ற வாதம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே உள்ளது.

கார்கில் போர் முடிந்து 13 வருடங்களாகியும் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். கார்கில் போர் குறித்த இந்திய அரசின் பல நடவடிக்கைகள் இன்னும் வெளிச்சத்துக்கு வராத  மர்மமாகவே உள்ளன.
More than a Blog Aggregator

புதன், 16 ஜனவரி, 2013

தேசிய பிரச்சினைகளும், பிரதமரின் மௌனமும்!



இந்தியாவில்  பிரச்சினைகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு  அரசு ஏதாவது  நடவடிக்கை எடுக்கிறதா  என்பதுதான் மிகப்பெரும் சந்தேகமாக உள்ளது பிரச்சினை தானாகவே தீர்ந்துவிடும், நாம் ஏன் தேவை இல்லாமல் பிரச்சினைக்குள் தலையை விடவேண்டும்  என்று அரசியவாதிகள் நினைப்பார்கள் போல!. பிரச்சினை முற்றி பொதுமக்கள் தெருவில் வந்து போராட ஆரம்பித்த பின்புதான் இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் செயல்பட ஆரம்பிக்கின்றனர்.  இவர்கள் ஒவ்வொருமுறை உறக்கத்திலிருந்து விழிப்பதற்கும் மக்கள் ஒவ்வொருமுறையும் தெருவில் இறங்கி போராட வேண்டியிருக்கிறது.  லோக்பால், டெல்லி பாலியல் வன்கொடுமை சம்பவம், 2G ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த்  ஊழல் போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் மக்களும், மீடியாவும், நீதித்துறையும்  போராடியிருக்காவிட்டால் UPA அரசு ஒருபோதும் நடவடிக்கை எடுத்திருக்காது. 

தேசிய பிரச்சினைகள் குறித்து நடவடிக்கைகள் எடுக்காதது ஒரு குற்றச்சாட்டு  என்றால், அந்த பிரச்சினைகள் குறித்து பிரதமர் தனது  வாயை திறப்பதே இல்லை  என்பது மற்றொரு குற்றச்சாட்டு.  தேசிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் என்ன கருத்து கொண்டிருக்கிறார் என்பதை அறியவே மக்களுக்கு பல மாதங்கள் ஆகிவிடுகிறது. ஊரே தீப்பிடித்து  எரிந்தாலும் தனது வாயை திறப்பதில்லை என்ற கொள்கையில் மட்டும் பிரதமர் ஒருபோதும் தவறுவதில்லை. நாட்டின் ஒவ்வொரு பிரச்சினையின் போதும் பிரதமர் வாயை திறக்க எவ்வளவு காலம் பிடித்தது என்பதை இந்தியா டுடே பத்திரிக்கை ஒரு அட்டவணையில் காட்டியுள்ளது.

குறிப்பாக இரண்டு ராணுவ வீரர்கள் பாகிஸ்தானிய ராணுவத்தினரால் கொலை செய்யப்பட விவகாரத்தில் பிரதமர் ஒன்பது நாட்களுக்குப் பிறகு கருத்து கூறியது பலவித குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. பலர் பல கருத்துக்களை தெரிவித்தாலும் பிரதமரின்   கருத்தைத்தானே நாம் சந்தேகமின்றி நம்ப முடியும். பிரதமர் தனது கருத்தை அல்லது கண்டனங்களை உடனடியாக தெரிவிக்காதது என்னுள் மிகப்பெரும் குழப்பத்தை உருவாக்கியது. பாகிஸ்தான் கூறிய வாதங்கள் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை கூட என் மனதில் உருவாக்கியது. அந்த சம்பவம் குறித்து கருத்து கூற பிரதமர்க்கு ஏன் ஒன்பது நாட்கள் தேவைப்படுகிறது?. இந்த ஒரு சம்பவத்தில் மட்டுமல்ல. எந்த சம்பவத்தை எடுத்துக்கொண்டாலும் பிரதமர் இதே கொள்கையைத்தான் கடைபிடிக்கிறார். 
   
பொதுவாக அரசின் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் மக்களுக்கு எந்த விஷயமும் தெரியவேண்டியதில்லை என்ற எண்ணத்தில் ஒரு அரசு செயல்படுவது அரசுக்கு நல்லதல்ல. தேசிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் என்ன கருத்து கொண்டிருக்கிறார் என்று ஓவ்வொரு இந்திய குடிமகனும் அறிய முற்படுவது நியாயமான விஷயம்தான். ஜனநாயக நாட்டில் அது பிரதமரின் கடமையும் கூட. அது ஒன்றும் ராணுவ ரகசியம் அல்லவே!?. ஏதாவது கருத்தை கூறி கூட்டணி கட்சிகளிடம் மாட்டிக்கொள்வதை விட, வாயையே திறக்காமல் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார் போலும்! இதனை புத்திசாலித்தனமான நடவடிக்கையாக அவர் கருதலாம். ஆனால் மக்கள் அவரை  பலவீனமான பிரதமராகத்தான் கருதுவார்கள் என்பதே உண்மை.
More than a Blog Aggregator