வியாழன், 7 பிப்ரவரி, 2013

ட்விட்டர் ஹேக்கிங் - பின்னணியில் சீனாவின் சதி!



படம்:Google
ட்விட்டர் தளத்தை ஹேக்கிங் செய்து சுமார் 2,50,000 நபர்களது அந்தரங்க தகவல்களை ஹேக்கர்கள் திருடியதின் பின்னணியில் சீனாவின் சதி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. 

சென்ற வாரத்தில் ட்விட்டர் சமூக தளம் ஹேக்கர்களால் தாக்கப்பட்டு சுமார் 2,50,000 நபர்களது user names, ஈ-மெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்டுகள் ஆகியவை திருடப்பட்டன. அமெரிக்க நாளிதழ்களான நியுயார்க் டைம்ஸ், த வால் ஸ்ட்ரீட் ஜர்னல், த வாஷிங்டன் போஸ்ட் ஆகியவை தங்களது தளங்கள் சமீப காலமாகவே மிகப் பெரிய சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்துள்ளன. இத்தகைய தாக்குதலுக்கு பின்னணியில் சீனா இருப்பதாக இப்போது மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கென மிகப்பெரிய ஹேக்கர்ஸ் படை ஒன்றினை சீன அரசு ரகசியமாக உருவாக்கி உள்ளதாக இதனால் பாதிக்கப்பட்ட நாடுகள் நம்புகின்றன. இந்த ஹேக்கர்ஸ் படை  மேற்கத்திய நாடுகளின் மிகப்பெரும் நிறுவனங்களின் வியாபார ரகசியங்களை கண்டுபிடிப்பது மட்டுமில்லாமல் முக்கியமான பத்திரிக்கையாளர்கள், சீன அரசின் எதிர்ப்பாளர்கள ஆகியோரது ரகசியங்கள், பிற நாடுகளின் ராணுவ ரகசியங்கள் ஆகியவற்றை உளவு பார்ப்பது போன்ற வேலைகளையும் செய்கின்றன.  சீன அரசு மேற்கண்ட குற்றச்சாட்டுக்களை மறுத்த போதிலும், இது போன்ற ஹேக்கிங் குற்றங்கள் சீனாவிலிருந்தே செயல்படுத்தப்படுவது போல் தோன்றுகின்றன என்று பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

2010 ஆம் ஆண்டிற்கான பிரிட்டனின்  Strategic Defence Review அறிக்கையில் சைபர் தாக்குதல் என்பது நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரும் ஆபத்தாக உள்ளது  என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.  வழக்கமான பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது போன்று சைபர் போருக்கு எதிராகவும் நாம் போராட வேண்டியுள்ளது  என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குனர் பாப் லார்ட் தெரிவிக்கையில் ட்விட்டர் சமூக தளம் மீதான தாக்குதல் ஏதோ பொழுதுபோக்கிற்காக செய்யப்பட்டது அல்ல என்றும், இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மிகுந்த திறமைசாலிகள் என்றும், இதை தனித்த ஒரு சம்பவமாக தாம் கருதவில்லை என்றும், ட்விட்டர் போன்று பிற நிறுவனங்களும் இது போன்ற தாக்குதலுக்கு தற்காலத்தில் உள்ளாகியிருக்கலாம் என்றும் தெரிவித்தார். அதனாலேயே தம் நிறுவனத்தின் மீதான தாக்குதலை வெளிப்படையாக தெரிவித்ததாகவும், தாக்குதல் குறித்த தகவல்களை தற்போது திரட்டிவருவதாகவும்,  இது குறித்த புலன் விசாரணையில் அரசாங்கத்திற்கும், பெடரல் லா என்போர்ஸ்மென்ட் அமைப்பிற்கும் உதவி வருவதாகவும், குற்றவாளிகளை தண்டித்து பாதுகாப்பான இணையத்தை பயன்பாட்டாளர்களுக்கு வழங்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

கூகிள் நிறுவனத்தின் எக்ஸிக்யுடிவ் சேர்மன் எரிக் ஸ்மித்  தற்போது எழுதிக்கொண்டிருக்கும் புத்தகமான The Digital Age புத்தகத்தில் சீனாவின் ஹேக்கர்கள் எவ்வாறு உலகிற்கு மிகப்பெரும் ஆபத்தாக உருவாகி வருகிறார்கள் என்பதை விவரித்துள்ளதாக கூறப்படுகிறது. சீனாவை மையமாகக் கொண்ட சைபர் குற்றங்கள் உலகம் முழுமைக்கும்  பேரழிவாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலகிலேயே திறமை வாய்ந்த ஹேக்கர்கள் உள்ள நாடாக சீனா உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார். சீனாவின் கணினி சார்ந்த தொழில் நுட்பங்கள் மற்றும் உபகரணங்கள் தற்போது உலகம் முழுவதும் அதிக அளவில் விற்பனையாகி வருவதால் சீனாவை சேர்ந்த ஹேக்கர்களுக்கு  ஹேக்கிங் செய்வது என்பது மிகவும் எளிதான செயலாக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


நியுயார்க் டைம்ஸ், த வால் ஸ்ட்ரீட் ஜர்னல்  ஆகிய பத்திரிக்கைகள் தங்கள் மீதான சைபர் தாக்குதல் என்பது சீனாவை விமர்சிக்கும் பத்திரிக்கையாளர்களை உளவு பார்ப்பதற்கான முயற்சியே  என்று குற்றம் சாட்டியுள்ளன. சீனாவின் வருங்கால அதிபராக கருதப்படும் ஷி ஜின்பிங்கின் உறவினர்கள் ஆச்சரியமூட்டும் வகையில் சொத்து சேர்த்துள்ளது பற்றிய செய்தி தொகுப்பை வெளியிட்டவுடன், அடுத்த கணமே தனது தளம் ஹேக்கிங் செய்யப்பட்டதாக Bloomberg Financial News  தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் மீது மிகப்பெரும் சைபர் தாக்குதலை தொடுத்து வரும் சீனா தனது நாட்டில் சைபர் பாதுகாப்பை வலிமையாக வைத்துள்ளது. அது தனது மக்களுக்கு சுதந்திரமான இணையத்தை வழகுவதில்லை. சமூக வலைத்தளங்களுக்கு அனுமதியளித்தால் அரபு நாடுகளில்  ஜனநாயகத்திற்கு ஆதரவான புரட்சி வெடித்தது போன்று சீனாவிலும் புரட்சி வெடித்துவிடும் என்று சீன அரசு அஞ்சுவதாலேயே அது Twitter மற்றும் Facebook தளங்களை தடை செய்துள்ளது. சுதந்திரமான இணையம் என்பது சீனாவின் கம்யுனிச கோட்டையை தகர்த்துவிடும் என்று சீன அரசு உறுதியாக நம்புகிறது. சீனாவின் சொந்த சமூக வலைத்தளமான வெய்போ (Weibo) வில் மட்டும் சுமார் 1,000 பேர் சென்சார் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தினசரி சீன அரசுக்கு எதிரான 10 மில்லியன் செய்திகளை வெய்போ தளத்திலிருந்து நீக்குகின்றனர். கம்யுனிசத்திற்கு ஆதரவாக இணையத்தில் பதிவுகளை வெளியிட 3,00,000-க்கும் மேற்பட்ட சீனர்கள்  சம்பளத்திற்கு  நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க உளவுத்துறையினர் சீனாவின் சைபர் போரிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள தங்கள் நாட்டின் தலை சிறந்த கணினி நிபுணர்களை பணியில் அமர்த்தியுள்ளனர். ஏனென்றால் வருங்காலத்தில் இரு நாடுகளுக்கிடையேயான போர் என்பது போர்க்களத்தில் வழக்கமான ஆயுதங்களுடன் நடைபெறுவதாக இருக்காது. உதாரணமாக அமெரிக்கா ஒரு நாட்டின் மீது தாக்குதல் தொடுத்தால், எதிரி நாடு பதிலடியாக இணையத்தை பயன்படுத்தி அமெரிக்காவின் தேசிய மின்சார கிரிட்டை அல்லது நீர் விநியோகத்தை தடை செய்ய முற்படலாம். 

உலகத்திலேயே தனது நாட்டின் பரப்பை விரிவுபடுத்தும் ஆசை அதிகம் கொண்ட நாடு சீனாதான். தன் ஆசையை வெறும் கனவாக கொண்டிராமல் அதனை செயல்படுத்தும் திட்டத்தையும் சிறிது சிறிதாக சீன அரசு கவனமாக செய்து வருகிறது. சீன அரசு தொடங்கி இருக்கும் சைபர் போர் (cyber war) என்பது அதில் ஒரு வகைதான். பல நாடுகள் அணு ஆயுதங்களை கொண்டிருக்கும் நிலையில், வருங்காலத்தில் போர் என்பது வழக்கமான ஆயுதங்களை கொண்டு நடக்க வாய்ப்பில்லை. செலவில்லாமல், ரத்தம் சிந்தாமல் இணையத்தின் மூலம் ஒரு நாட்டை பொருளாதார ரீதியாக முடக்கும் சைபர் போர் மட்டுமே எதிர்காலத்தில் நடக்கும். சீனாவின் சைபர் போரை எதிர்கொள்ள அமெரிக்கா,  பிரிட்டன் போன்ற நாடுகள்  தயாராகி வருகின்றன. அதுபோல இந்தியாவும் சைபர் துறையில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது. ஏனென்றால்  நான் அடிக்கடி கூறுவது போல் இந்தியா தனது முதல் எதிரியாக கருதவேண்டியது சீனாவைத்தான். பாகிஸ்தானை அல்ல. சீனாவின் நவீன தொழில் நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தியாவும் தன்னை நவீனபடுத்திக்கொள்ள விடும். இல்லாவிடில் 1962 –ல் நடந்த வரலாறு மீண்டும் நடப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். வரலாற்றிலிருந்து நாம் பாடம் படித்துக்கொள்ளவேண்டும். தவறினால் ஏற்படும் இழப்புகள் அதிகமாக இருக்கலாம்.
More than a Blog Aggregator

சனி, 2 பிப்ரவரி, 2013

கார்கில் போர்: வெளிவந்த உண்மையும், வெளிவராத மர்மங்களும்!


கார்கில் போர் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அப்போதைய பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் முஷராப் ஹெலிகாப்டர் மூலம் இந்திய எல்லையை (Line of Control) கடந்து இந்திய பகுதிக்குள் 11 km தூரத்திற்கு  நுழைந்ததாகவும், அந்த பகுதியில் ஒரு நாள் இரவு முழுக்க தங்கி இருந்ததாகவும் முன்னாள் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி Col (retd) அஷ்பக் ஹூசைன் தற்போது தெரிவித்துள்ளார். மார்ச் 28, 1999 அன்று மேற்கண்ட சம்பவம் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அப்போது முஷாரப்புடன் பிரிகேடியர் மசூத் அஸ்லம் உடன் இருந்ததாகவும், அவர்கள் சிக்ரியா முஸ்தாகர் என்னும் இடத்தில் அன்றைய இரவை கழித்ததாகவும், மறுநாள் முஷராப் பாகிஸ்தான் எல்லைக்கு திரும்பியதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார். அவர்கள் தங்கிய இடத்தில் ஏற்கனவே Col அம்ஜத் ஷபிர் தலைமையில்  பாகிஸ்தானிய ராணுவம் முகாமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹூசைன் இச்செய்தியை ஏற்கனவே 2008 ல் வெளியிடப்பட்ட  தனது புத்தகமான  Witness to Blunder: Kargil Story Unfolds ல் தெரிவித்திருந்தார். அவர் வியாழக்கிழமை அன்று ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலும் இதே கருத்தை வலியுறுத்தினார். கார்கில் போர் முஷராப் தலைமையில் நான்கு ஜெனரல்களால் திட்டமிடப்பட்டது என்று  Lt Gen. (retd) ஷாஹித் ஆஷிஸ் கூறியது பற்றி கருத்து கேட்ட போது ஹூசைன் இவ்வாறு தெரிவித்தார்.

டிசம்பர்  18, 1998, அன்று  பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு பிரிவு  முதன் முதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகவும், அதன் பின் மற்ற பிரிவுகள் LoC யை கடந்து இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க ஆணையிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய பகுதிக்குள் முன்னேற பாகிஸ்தான் ராணுவ பிரிவுகள் ஒவ்வொன்றும் போட்டிபோட்டன என்றும்  அவர்  கூறியுள்ளார்.

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி இந்திய பகுதிகளை ஆக்கிரமித்த செய்தி முதன் முதலாக ஒரு ஆடு மேய்ப்பவரால் மே 3 , 1999 அன்று இந்திய ராணுவத்திற்கு தெரிவிக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

இது பற்றி இந்திய ராணுவ முன்னாள் தலைமை தளபதி V K சிங் கருத்து தெரிவிக்கையில் தான் ஒரு ராணுவ தளபதி என்ற முறையில் இந்திய எல்லைக்குள் 11 km தூரம் வரை வந்த முஷாரபின் துணிச்சலை தாம் பாராட்டுவதாகவும், ஏனென்றால் அது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அதிபயங்கரமான ஒரு காரியம் என்றும் அவர் கூறினார். ஆனால் அதே சமயத்தில் இந்திய தரப்பிலும் சில தவறுகள் நடந்துள்ளன என்றும், பாகிஸ்தானிய ராணுவம் இந்திய பகுதிக்குள் அவ்வளவு தூரம் நுழைய எவ்வாறு அனுமதிக்கப்பட்டது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

கார்கில் போர் முஜாகிதீன்களால் நடத்தப்பட்டது என்று தொடக்கத்தில் பாகிஸ்தான் பொய் பிரச்சாரம் செய்து வந்தது.. அப்போரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை என்றும் தொடர்ந்து பொய் கூறி வந்தது. ஆனால் கார்கில் போர் என்பது பாகிஸ்தான் ராணுவத்தினரால்தான்  நடத்தப்பட்டது என்ற உண்மை தற்போது பாகிஸ்தான் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. பாகிஸ்தான் தொடர்ந்து பொய்களை கூறிவரும் ஒரு  ஏமாற்று நாடு எனபது இதன் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. மேற்கண்ட பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் அறிக்கையை அதற்கான ஒப்புதல் வாக்குமூலமாகத்தான் பார்க்க வேண்டும். கார்கில் போர் பாகிஸ்தான் ராணுவத்தை பொறுத்தவரையில் வெற்றி என்றும், ஆனால் அரசியல் ரீதியாக தோல்வி என்றும், நவாஸ் ஷெரிப் அப்போது அமெரிக்காவிற்கு செல்லாமல் இருந்திருந்தால் கார்கில் போரின் முடிவு வேறாக இருந்திருக்கும் என்றும் முஷரப் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
  
கார்கில் போர் குறித்து விடை கிடைக்காத கேள்விகளும்  சில உண்டு. 

1) டிசம்பர்  18, 1998 அன்று இந்திய எல்லைக்குள் முதன்முதாலாக பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. மார்ச்28, 1999 அன்று அப்போதைய பாக். ராணுவ தளபதி முஷராப் இந்திய எல்லைக்குள் 11 km தூரம் ஊடுருவி ஒரு நாள் இரவு தங்கி சென்றுள்ளார். கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பின்னரே (மே 3 , 1999 ) பாக். ராணுவத்தின் நடவடிக்கை இந்திய ராணுவத்திற்கு தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் நம் உளவு நிறுவனங்களுக்கு தெரிந்து நடந்ததா அல்லது தெரியாமல் நடந்ததா?.

2)  பாக். ராணுவத்தின் நடவடிக்கை குறித்து அரசு முன்னரே அறிந்திருந்தால் ஏன் இந்திய ராணுவம் தன் நடவடிக்கையை உடனே  தொடங்கவில்லை?. பாக். ராணுவம் தொடர்ந்து முன்னேற ஏன் அனுமதிக்கப்பட்டது.? இதில் ஏதாவது ராஜ தந்திர நடவடிக்கை உள்ளதா?. அவ்வாறு ராஜ தந்திர நடவடிக்கை என்றால் அதனால் இந்தியா பெற்ற பலன் என்ன?.  இந்திய ராணுவத்தின் தாமதமான நடவடிக்கையால் ராணுவ வீரர்களின் உயிரிழப்பு அதிகரித்ததுதான் உண்மை. 

3) உளவு நிறுவனங்களுக்கு பாக். ராணுவத்தின் நடவடிக்கை தெரிந்திருக்கவில்லை என்றால் அவைகளின் தோல்விக்கு காரணம் என்ன?. உளவு நிறுவனங்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்ற வாதம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே உள்ளது.

கார்கில் போர் முடிந்து 13 வருடங்களாகியும் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். கார்கில் போர் குறித்த இந்திய அரசின் பல நடவடிக்கைகள் இன்னும் வெளிச்சத்துக்கு வராத  மர்மமாகவே உள்ளன.
More than a Blog Aggregator