வெள்ளி, 7 டிசம்பர், 2012

1962 இந்திய சீன போர் - சொல்லப்படாத உண்மைகளும், சில படிப்பினைகளும்!



பெரும்பாலான இந்தியர்களுக்கு அமெரிக்காவை இந்தியாவின் நண்பனாக ஏற்றுக்கொள்ள விருப்பம் இருப்பதில்லை. 1971 இந்திய பாகிஸ்தான் போரின்போது அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்த போர் உதவிகள் அதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். 1962 இந்திய சீன போரின்போது அமெரிக்கா இந்தியாவிற்கு அளித்த வெளிப்படையான, உறுதியான ஆதரவு பற்றி பெரும்பாலான இன்றைய இந்தியர்கள்  அரிந்திராததும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். அன்றைய தினத்தில் அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவு அளித்திருக்காவிட்டால் அப்போரின் முடிவு இந்தியாவிற்கு தற்போது உள்ளதை விட மிக மோசமாக இருந்திருக்கும். 

1962 இந்திய சீன போரின்போது இந்தியாவுக்கு மிகவும் ஆதரவாக இருந்து சீனாவின் ஆக்ரமிப்பு வேகத்தை முடக்கியது அமெரிக்காதான். இந்தியாவுக்கு ஆதரவாக USS Kitty Hawk  போர் விமானத்தை வங்காள விரிகுடா பகுதிக்கு அனுப்பவும் அமெரிக்கா தயாரானது.  அதனாலேயே சீனா தானாக போர் நிறுத்தத்தை அறிவித்து  பின்வாங்கியது. அக்காலக்கட்டத்தில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் F கென்னடி இந்தியர்களின் மனதில் மிகப்பெரும் ஹீரோவாக விளங்கினார். பட்டிதொட்டி எங்கும் அவரை இந்திய மக்கள் புகழ்ந்து பேசினர். சாதாரண பெட்டிக்கடைகளில் கூட கென்னடியின் புகைப்படங்கள் நேருவுடனும், காந்தியுடனும் காணப்பட்டன. 1963 நவம்பரில் கென்னடி கொலை செய்யப்பட்டவுடன், இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அவருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். அவர் உலக மனித நேயத்தின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியர்களால் கருதப்பட்டார். போரின்போது நெருக்கடி நிலையினை கையாண்ட நேருவின் செயல்பாடு  பதட்டம் நிறைந்ததாக இருந்தது. ஆனால்  அதே சமயத்தில் கென்னடியின் செயல்பாடு அமைதியாகவும், நம்பிக்கை நிறைந்ததாகவும் அமைந்தது. அதுவே கென்னடியின் மதிப்பினை இந்தியர்களின் மனதில் பன்மடங்கு உயர்த்தியது.  
  
இந்திய சீனப்போரை உலகின் மற்ற நாடுகள் அக்காலக்கட்டத்தில் ஒரு பொருட்டாக அல்லது மிக முக்கியமாக கருதவில்லை. ஏனென்றால் அப்போது கியூபா ஏவுகணைப் பிரச்சினையில் அமெரிக்காவுக்கும், சோவியத்துக்கும் இடையே உருவான  பகைமை உலகில் மிகப்பெரும் பதட்டத்தை உருவாக்கி உலக நாடுகளின் கவனிப்பை பெற்றிருந்தது. ஆனால் இன்று சோவியத் ரஷியா சிதைவடைந்த நிலையில் கியுபா பிரச்சினை ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது. ஆனால் இன்று இந்திய சீன எல்லைப் பிரச்சினை உலகின் அமைதிக்கு மிகப்பெரும் தலைவலியாக மாறிவிட்டது. பிற்காலத்தில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே ராணுவ மோதல் நடந்தால் அது உலக நாடுகளை பெரும்விதத்தில் பாதிக்கும் என்பது நூறு சதம் உண்மை. இந்திய சீனப் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டவைகளில்  இந்தியாவில் உள்ள கம்யுனிஸ்ட் இயக்கங்களும் ஒன்று. அதுவரை காங்கிரசுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் வலுவாக காலுன்றியிருந்த  கம்யுனிஸ்ட் இயக்கங்கள், அதற்குப்பின் இந்தியாவில் தலைதூக்கவே முடியவில்லை. இந்தியாவில் கம்யுனிசம் வெற்றி பெற்றிருந்தால், அது அமெரிக்க ரஷிய நாடுகளிடையே நடந்த பனிப்போரின் முடிவை வேறுவிதமாக மாற்றியிருக்கலாம்.

உண்மையில் 1962 ல் கென்னடி கியுபா பிரச்சினையில்தான்  தன்னுடைய முழுக்கவனத்தையும் செலுத்தினார். இந்திய சீன போர் பிரச்சினையை கையாளும் அதிகாரத்தை அவர் அப்போதைய அமெரிக்க தூதர்  பேராசிரியர் ஜான் கேல்ப்ரைத் என்பவரிடம் ஒப்படைத்தார்.  போரில் இந்தியாவின் நிலைமை மிகவும் மோசமான போது பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்த அமெரிக்க விமானப்படைகள் உஷார் செய்யப்பட்டன. வார்சாவில் இருந்த அமெரிக்க தொடர்புகளின் மூலம் சீனா கடுமையாக எச்சரிக்கப்பட்டது. சீனாவின் ஆக்கரமிப்பு நடவடிக்கை தொடருமானால், இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் இறங்கும் என்று  சீனாவிடம் அமெரிக்கா உறுதியாக தெரிவித்தது. வெறும் அறிவிப்போடு நிற்காமல் அமெரிக்க விமானப்படையின் C-130 ஹெர்குலிஸ் போர்விமானம் போர்க்களத்தில் நின்ற இந்திய வீரர்களுக்கு ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும், தேவையான   உடைகளையும் சப்ளை செய்தது. 

அப்படியானால் அப்போது இந்தியாவின் நண்பனாக கருதப்பட்ட சோவியத் ரஷியா என்ன செய்து கொண்டிருந்தது. அது இந்தியாவின் வரலாற்றில் மிகபெரும் ஏமாற்றத்தை அளித்த சம்பவம் ஆகும். இந்தியாவின் நம்பிக்கைக்கு நேர் எதிராக சோவியத் இந்தியாவை கைவிட்டது. போர் ஏற்பட்டதற்கு இந்தியாவே காரணம் என்று சோவியத் குற்றம் சாட்டியது. மேலும் போரின்போது சீனாவின் இந்திய ஆக்கரமிப்பு நடவடிக்கையை சோவியத் ஆதரித்தது. ஏற்கனவே போரின் தோல்வியால் ஏமாற்றமடைந்து, தனித்துவிடப்பட்டு, நொந்து போயிருந்த இந்தியாவுக்கு, சோவியத்தின் வெளிப்படையான  சீன ஆதரவு கொள்கை நிலை மேலும் பேரிடியாக அமைந்தது.

1962 ல் அமெரிக்க ரஷிய போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உச்சக்கட்டத்திலிருந்த நேரம். அக்டோபர் 25, 1962 அன்று சோவியத் பத்திரிகை ப்ரவ்தா தனது முதல் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் இந்திய சீன போருக்கு இந்தியாவே காரணம் என்று குற்றம் சாட்டியது. இந்திய சீன எல்லை கோடான மெக்மோகன் கோடு நியாயமற்றது என்றும், அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் திணிப்பு என்றும், அந்த எல்லைக்கோடு சட்டப்படி செல்லாது என்றும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டது. இந்தியா ஏகாதிபத்திய நாடுகளின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று அது மேலும் குற்றம் சாட்டியது. ஆனால் சோவியத்தின் இந்த நம்பிக்கை துரோக செயலுக்கு நேர்மாறாக கென்னடியின் இந்திய ஆதரவு நிலை இருந்து. இந்தியாவுக்கு மிகவும் தேவைப்பட்ட  நேரத்தில் அமெரிக்கா எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் தனது உதவியை அளித்தது. அதுவே இந்தியர்களின் மனதில் கென்னடி மிகப்பெரும் இடத்தை அடைய ஒரு காரணமாக அமைந்தது.

அமெரிக்க தூதர் பேராசிரியர் கேல்பிரித் தன்னிடம் பேசும்போது, அக்காலக்கட்டத்தில் அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து டெல்லியில் நிலை கொண்டிருந்ததாகவும், அவைகள் இந்திய திபெத் எல்லை பகுதிகளை தொடர்ந்து புகைப்படம் எடுத்து இந்தியாவிற்கு வழங்கியதாகவும் தெரிவித்தாக ஓய்வு பெற்ற col. அனில் அதாலே தெரிவிக்கிறார். ஏனென்றால் அப்போது இந்திய சீன எல்லைப்பகுதி குறித்த எந்த வரைபடமும் இந்தியாவிடம் இருக்கவில்லை. அமெரிக்க விமானங்கள் வழங்கிய புகைப்படங்கள் இந்தியாவிற்கு மிகப்பெரும் உதவியாக இருந்தது. அமெரிக்காவின் இந்த உதவிகள் காரணமாக அன்றைய காலக்கட்டத்தில் இந்திய அமெரிக்க நட்புறவு வலுவான நிலையில் இருந்தது. ஏனென்றால் நண்பனின் துரோகத்தால் துவண்டிருந்த இந்தியாவிற்கு அமெரிக்காவின் எதிபாராத உதவி உயிர் காக்கும் மருந்தாக அமைந்தது.
நவம்பர் 16, 1962 அன்று சீனா தானாக போர் நிறுத்தத்தை அறிவித்தது. அதுமட்டுமில்லாமல் அருணாச்சலப்பிரதேசத்தில் தான் ஆக்ரமித்த பகுதிகளைவிட்டு பின்வாங்குவதாகவும் அறிவித்தது. அளவுக்கு மீறி இந்தியாவின் இமயமலைப் பகுதிக்குள் ஊடுருவியதால், அப்பகுதிகளை தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைப்பது  இயலாத காரியம்  என்பதை உணர்ந்து சீனா பின்வாங்கியது உண்மைதான். ஆனால் அமெரிக்க விமானப்படையின் தலையீடும், வார்சாவிலிருந்து அமெரிக்காவால் விடுக்கப்பட்ட எச்சரிக்கையும் சீனாவின் பின்வாங்கலுக்கு மற்றொரு முக்கிய காரணமாக அமைந்ததை எவரும் மறுக்க முடியாது.



ஆனால் இந்திய அமெரிக்க உறவு அடுத்த ஒரு வருடத்தில் கசந்து போகத் தொடங்கியது. பிரிட்டிஷ் ஆதரவுடன் பாகிஸ்தான் அளித்த நெருக்கடி காரணமாக அமெரிக்காவின் இந்திய ஆதரவு போக்கு மாறத்தொடங்கியது. ஆனால் தற்போது இந்திய அமெரிக்க நட்புறவு மீண்டும் மேம்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தென்சீனக்கடல் பிரச்சினை, ஆப்கானிஸ்தான் பிரச்சினை என்று பல உலகப்பிரச்சினைகளில் இந்தியாவின் நிலைப்பாடு அமெரிக்காவின் நிலைப்பாடுடன் ஒன்றுபடுகிறது. இப்போதைய  உலக அரங்கில் இந்திய அமெரிக்க நட்புறவு மேம்படுவது இந்தியாவிற்கு நலத்தை தரும். எந்த நாடும் பிரதி பலன் பார்க்காமல் நட்பு கரத்தை நீட்டுவதில்லை.  அமெரிக்காவிடம் இருந்து சில உதவிகளை நாம் பெறும்போது, நாம் சில உதவிகளை அவர்களுக்கு வழங்குவது தவறல்ல. உலக அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளை ராஜதந்திரமாக பயன்படுத்துவதின் மூலம் உலக அரசியலில் நாம் சிறந்த லாபங்களை பெற முடியும். மேலும் ஆசியாவின் மிகப்பெரும் ஆபத்தான சீனாவை எதிர்கொள்ள நம் கையில் அமெரிக்கா என்னும் ஆயுதம் கண்டிப்பாக தேவை. அதேபோல் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஏகாதிபத்தியத்தை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவி அமெரிக்காவிற்கு தேவை. எனவே இந்திய, அமெரிக்க நட்புறவு இரு நாடுகளுக்கும் பலனைத் தரக்கூடியதாகும். சிறு சிறு அரசியல் லாபங்களுக்காக அமெரிக்காவை விமர்சித்துக்கொண்டிருக்காமல், அமெரிக்காவிடம் வெளிப்படையாக நட்பு கொள்வதே எதிர்காலத்தில் இந்தியாவிற்கு நலம் பயக்கும். இந்த விஷயத்தில் தற்போது மன்மோகன் அரசு சரியான திசையிலேயே செல்வதாக நான் நினைக்கிறேன்.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 கருத்து:

  1. நண்பரே...உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்....பார்க்கவும்..

    பதிலளிநீக்கு