வினோத் ராய், CAG of India |
2G அலைக்கற்றை
ஏலம் எதிர்பார்த்த அளவிற்கு போகாமல் தோல்வியில் முடிந்துள்ளது. இதனை அடுத்து தகவல்
மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் மணிஷ் திவாரியும், திக்விஜய் சிங்கும் CAG
வினோத் ராய் மீது தாக்குதல் தொடுக்க
ஆரம்பித்துள்ளனர். அதாவது CAG 2010
–ல் நிர்ணயித்த தொகைக்கு 2G ஏலம்
போகவில்லை என்றும், அதனால் அது முன்னதாக தன் தணிக்கை அறிக்கையில் தெரிவித்த “அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு” என்ற கருத்தை மாற்றிக்கொள்ளவேண்டும் என்றும்
காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மற்றொரு காங்கிரஸ் தலைவரோ உண்மை மக்களின் முன்
வைக்கப்பட்டுள்ளது என்று கிண்டலாக கூறுகிறார். அதாவது 2G ஏலத்தில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று இதுவரை CAG கூறியது பொய்யான தகவல் என்றும், அதன் மூலம் 2G ஏலத்தில் ஊழலே நடக்கவில்லை என்றும் மறைமுகமாக
காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக 2G ஏலத்தில் ஊழல் என்று குற்றம் சாட்டியாவர்கள்
காங்கிரசிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிறார் மனிஷ் திவாரி.
2G அலைக்கற்றை ஏலம் எதிர்பார்த்த தொகைக்கு போகாமல்
தோல்வியில் முடிந்திருக்கலாம். CAG தனது அறிக்கையில் தெரிவித்த அளவிற்கும் மிகக்குறைவான தொகைக்கு ஏலம்
போயிருக்கலாம். ஆனால் அதற்காக CAG தனது தணிக்கை அறிக்கையினில் தவறான தகவல்களை
அளித்திருக்கிறார் என்று கூறுவதை என்னால் ஏற்கமுடியவில்லை. அதுமட்டுமில்லாமல் 2G ஏலம் மிகக்குறைந்த அளவிற்கு போயுள்ளதால் அதில்
ஊழல் ஏதும் நடக்கவில்லை என்ற காங்கிரசார் முடிவுக்கு வருவதையும் என்னால்
ஏற்கமுடியவில்லை. என்னுடைய மூன்று வாதங்கள் இதுதான்.
1) 2008- ல் அலைக்கற்றை ஏலத்தின்போது
122 லைசென்சுகள் Rs.9,200 கோடிக்கு முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற
அடிப்படையில் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது
2012 - ல் வெறும் 22 லைசென்சுகள் Rs.9,407 கோடிக்கு
ஏலம் சென்றுள்ளன. அப்படியானால் முன்னதாக அரசுக்கு இழப்பு ஏற்பட்டது உண்மையா?
பொய்யா?. 2008- ல் 122 லைசென்சுகளை ஏலம் விட்டு அரசுக்கு கிடைத்த
தொகை தற்போது வெறும் 22
லைசென்சுகளை ஏலம் விட்டதில் அரசுக்கு கிடைத்திருக்கிறது.
2) CAG தனது அறிக்கையினை 2010-ஆம் ஆண்டு வெளியிட்டது. அப்போதைய சந்தையின் அதிகபட்ச அலைக்கற்றை விலையினை
கொண்டு CAG அனைத்து பகுதிகளுக்குமான
விலையினை நிர்ணயித்திருக்கலாம். அந்த காலக்கட்டத்திற்கான விலை நிர்ணயம் தற்போதைய
காலக்கட்டத்திற்கு பொருந்தாமல் இருக்கலாம்.
CAG நிர்ணயித்த தொகை 2008- ஆம் ஆண்டிற்கான அலைக்கற்றை மதிப்பாகும். அம்மதிப்பு 2012-ஆம் ஆண்டில்
குறைந்திருக்கலாம். அதற்காக CAG நிர்ணயித்த 2008- ஆம் ஆண்டிற்கான அலைக்கற்றை
மதிப்பு தவறு என்று அர்த்தமாகாது.
3) இன்றைய கால கட்டத்தில் 3G, 4G என்ற தொழில் நுட்பங்கள் வந்துவிட்டபிறகு 2G –யின் மதிப்பு தானாகவே குறைவது இயற்கைதான். உதாரணமாக
நான் 2007 –ல் நோக்கியா N70 செல்போன் வாங்கும்போது
விலை ரூ.12,000/-. ஆகும். அதற்காக தற்போதும்
அதே விலைக்கு அந்த போனை விற்க முடியுமா?. அந்த போனை யாருக்காவது இலவசமாக
கொடுத்தால் கூட வாங்க மறுக்கிறார்கள். புதிய தொழில் நுட்பங்கள் வந்தவுடன், பழையவை
கழிக்கப்படுவது இயற்கைதான். அதற்காக நான் 2007 –ல் ரூ.12,000/-.க்கு N70 செல்போன் வாங்கியது
பொய்யாகி விடுமா?. அல்லது 2012 – ல் அதன் விலை ரூ.500/- என்பதற்காக 2007 –லும் அதன் விலை ரூ.500/- தான் என்று கூறமுடியுமா?. மேலும் நாட்டின் அப்போதைய பொருளாதார நிலை வேறு.
இப்போதைய பொருளாதார நிலை வேறு. இப்போதைய பொருளாதார மந்த நிலை கூட அலைக்கற்றை
ஏலத்தை பாதித்திருக்கலாம்.
CAG தனது தணிக்கை
அறிக்கையில் தெரிவித்த கணக்கீட்டில் ஒரு சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம்.
அலைக்கற்றையின் விலை மதிப்பு என்பதை துல்லியமாக கணிப்பது CAG – யால் மட்டுமல்ல, வேறு எவராலும் முடியாத
காரியம்தான். CAG குறிப்பிட்ட “அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு” என்பது உண்மையை விட சற்று அதிகமான தொகையாக கூட இருக்கலாம். ஆனால் அதற்காக 2008- ஆம் ஆண்டு
அலைக்கற்றை ஏலத்தில் அரசுக்கு நஷ்டம் ஏற்படவே இல்லை என்பது வடிகட்டின பொய்யாகும். அரசுக்கு மிகப்பெரும்
தொகை இழப்பு ஏற்பட்டிருகிறது என்பதுதான் நூறு சதவீதம் உண்மை.
அதேசமயத்தில் இப்போதைய 2G அலைக்கற்றை ஏலம்
எதிர்பார்த்த தொகைக்கு போகாமல் தோல்வி அடைந்தற்கு வேறு பல காரணங்கள் இருக்கலாம்
என்ற சந்தேகங்கள் என்னுள் எழுகின்றன. அவை உண்மையா? என்பதை காலம் எனக்கு
உணர்த்தலாம்.
Tweet | |||||
விலை போகாத அலைக்கற்றைகளை அரசு பொதுத்துறை நிருவங்களுக்கே ஒதுக்கட்டுமே அப்போ தெரியும் இவனுங்க வண்டவாளம். ஆட்சியில் இருக்கவனுங்க தான் தனியார் கைக்கூளிங்கலாச்சே அதை எங்கே செய்யப் போறானுங்க...........
பதிலளிநீக்குசரியாக சொன்னீர்கள்! தங்களின் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை!
நீக்குஇந்த விஷயத்தில் எதிர் கட்சிகள் தான் CAG க்கு ஆதரவாக இருந்து உன்மையை மக்களுக்கு உணர்த்தவேண்டும். இன்றைக்கு இருகிற நிலையில் BJP கூட காங்கிரசிடம் சமரசம் பேசி உங்க ஊழலை நாங்கள் கண்டுகொல்வதில்லை எங்கள் ஊழலை நீங்கள் கண்டுகொல்லாதீர்கள் என்றிருப்பார்கள் போலிருக்கிறது
பதிலளிநீக்குவதேரா மீதான ஊழல் குற்றச்சாட்டின்போது பிஜேபியின் நடவடிக்கை தாங்கள் கூறுவது போல்தான் இருந்தது.
நீக்குRight
பதிலளிநீக்கு