வியாழன், 13 டிசம்பர், 2012

குஜராத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்! - மோடி பிஜேபியின் பிரதமர் வேட்பாளரா!?




குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி மொத்தமுள்ள 182 இடங்களில்  கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இடங்களை அதாவது 122 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கடந்த புதன்கிழமை அன்று வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. LensOnNews நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த கருத்துக்கணிப்பில் காங்கிரசுக்கு 53 இடங்களும், கேசுபாய் பட்டேலின் குஜராத் பரிவர்தன் கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுயேட்சைகள் மற்றும் பிற கட்சியினர் ஆறு இடங்களை கைப்பற்றுவார்கள் என்று கருத்துக்கணிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் பிஜேபிக்கு 117 இடங்கள் கிடைத்தன.

மேற்கண்ட கருத்துக்கணிப்பின்படி குஜராத்தில் மோடி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது. இது ஏற்கனவே அனைவராலும் முடிவு செய்யப்பட  ஒரு கணக்கீடுதான். ஏனென்றால் தொடக்கம் முதலே குஜராத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை காங்கிரசுக்கே கிடையாது.  இந்த வெற்றியின் மூலம் குஜராத்தின் முதல்வர் பதவியை தாண்டி சில பெரிய லாபங்களை மோடி பெற வாய்ப்புண்டு. இந்திய அரசியலில் தன்னை ஒரு கவர்ச்சி மிக்க, செல்வாக்கு  மிக்க, நிர்வாகத்திறம் படைத்த  அரசியல்வாதியாக அவர் தன்னை இந்த வெற்றியின் மூலம் காட்டிக்கொள்ள முடியும். கத்காரி முதல் அடுத்த கட்ட தலைவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி தான் ஒரு பிரதமர் பதவிக்கான தகுதியான போட்டியாளர் என்பதை தன்னுடைய கட்சிக்கும், கூட்டணி கட்சிகளுக்கும், மக்களுக்கும் இதன் மூலம் மோடி தெரிவித்துக்கொள்வார். இதன் மூலம் மோடி பிஜேபியில் அசைக்க முடியாத சக்தியாக மாறிவிடுவார். அப்படியானால்  2014 – நாடாளுமன்ற தேர்தலில்  மோடி பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? நிற்க!

ஆர் எஸ் எஸ்ஸிடம் எப்போதுமே எதிர்காலத்திட்டமிடல்  என்பது மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கும். இரண்டு எம்பிக்களை கொண்டிருந்த ஒரு கட்சி இன்று நாட்டை ஆளும் அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு காரணம் ஆர் எஸ் எஸ் தான். பிஜேபிக்கு முதலில் ஆதரவளிக்க தயங்கிய  மற்ற அரசியல் கட்சிகளை திட்டமிட்டு பிஜேபிக்கு ஆதரவாக திருப்பியது ஆர் எஸ் எஸ் தான். அத்வானியை தீவிர இந்துத்துவா ஆதரவாளராக உருவகப்படுத்தியதோடு,  வாஜ்பாயை மிதவாத தலைவராகவும், மதவெறி இல்லாதவராகவும் ஆர் எஸ் எஸ் திட்டமிட்டு முன்னிலைப்படுத்தியது. மற்ற கட்சிகளும் அத்வானி என்றால் ஆதரவளிக்க மாட்டோம் என்றும்,  வாஜ்பாய் என்றால் ஆதரவளிப்போம் என்றும் கூறி (சிறுபான்மையினரை சமாதானப்படுத்த!) வாஜ்பாயிக்கு தங்கள்  ஆதரவை அளித்தன. கலைஞர் கூட “கெட்ட மரத்தில் விளைந்த நல்ல கனி” என்று வாஜ்பாயை வர்ணித்தது நமக்கு நினைவிருக்கலாம். இதன் மூலம் ஆர் எஸ் எஸ் விரும்பியது அப்படியே நடந்தது. பிஜேபியும் மத்தியில் ஆட்சியை பிடித்தது. ஆனால் அத்வானி ஆர் எஸ் எஸ்சின் சித்தாந்தத்தில் வைத்திருந்த நம்பிக்கையை விட அதிக நம்பிக்கை உடையவர் வாஜ்பாய் என்பது பலருக்கு தெரியாது.(கூட்டணி கட்சிகளும் வாஜ்பாயி மிதவாதி என்று கூறி சிறுபான்மை மக்களை ஏமாற்றின!. காரணம் அவர்களுக்கு தேவை பதவிகள்!). ஆர் எஸ் எஸ் இயக்கத்திற்காக திருமணமே செய்யாமல் பிரமச்சாரியாக வாழ்ந்தவர் வாஜ்பாய்.  ஆர் எஸ் எஸ்சின் பிரமச்சாரிய தொண்டர்கள் எவ்வளவு இந்துத்துவா கொள்கை பிடிப்பு கொண்டவர்கள் என்பது அவர்களுடன் பழகிப்பார்த்தவர்களுக்கு புரியும். இது கடந்த கால நிகழ்வுகள். 

2014 – நாடாளுமன்ற தேர்தலில்  ஆர் எஸ் எஸ்சின் திட்டம் இதுவாக இருக்கலாம். எப்படி 1990 –களில் அத்வானி தீவிர இந்துத்துவா ஆதரவாளராகவும், வாஜ்பாய் மிதவாத தலைவராகவும் உருவகப்படுத்தப்பட்டனரோ அதேபோல் 2014 – நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி தீவிர இந்துத்துவா ஆதரவாளராகவும், அத்வானி மிதவாத சகிப்புத்தன்மை கொண்ட தலைவராகவும் உருவகப்படுத்தபடலாம். அத்வானியை மிதவாத சிந்தனை கொண்ட தலைவராக  உருவகப்படுத்தும் பணியை ஏற்கனவே இந்துத்துவா அமைப்புகள் தொடங்கிவிட்டன என நான் நினைக்கிறேன். உதாரணமாக மோடிக்கு எதிரானவர் அத்வானி என்ற கருத்து பத்திரிக்கைகளில் உருவாக்கப்படுவதை கூறலாம்.  அத்வானியின் ஜின்னா ஆதரவு பேச்சை மற்றொரு உதாரணமாக கூற முடியும்.  இந்த கணக்கீட்டின்படி 2014 – நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் அத்வானியை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது என்பது  ஆர் எஸ் எஸ்சின் திட்டமாக இருக்கலாம். அத்வானி மீதான கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை திசை திருப்ப மோடியை துருப்பு சீட்டாக ஆர் எஸ் எஸ் பயன்படுத்தலாம். கூட்டணி கட்சிகளும் மோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவளிக்க மாட்டோம் என்றும், அத்வானி என்றால் ஆதரவளிப்போம் என்றும் தேர்தலுக்குப் பிறகு கூறலாம். தான் துருப்பு சீட்டாக பயன்படுத்தப்படுவது கூட மோடி விரும்பி ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாக இருக்கலாம் ஏனென்றால் பிஜேபியில் ஒரு தூசு அசைந்தால் கூட அது  ஆர் எஸ் எஸ்சின்  அனுமதி இல்லாமல் நடக்காது என்பதே உண்மை. மேலும்  ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் பதவி ஆசை பிடித்தவர்கள் என்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவர்கள் தாங்கள் கொண்ட இலட்சியத்தில் மிகுந்த உறுதி கொண்டவர்கள். எனவே அத்வானிக்கு மோடி போட்டியாளர் என்றோ, வாஜ்பாயிக்கு அத்வானி போட்டியாளர் என்றோ யாராவது கூறினால் நான் நம்ப மாட்டேன். எனவே என்னைப்பொறுத்தவரை 2014 – நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி யாரையும் பிரதமர் வேட்பாளராக முன்னரே அறிவிக்காது. தேர்தலுக்குப்பின்   ஆர் எஸ் எஸ்சின் பிரதமர் வேட்பாளர் அத்வானியாக இருக்கலாம். அதற்கான திட்டமிடலில் மோடி ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பரே,
    நல்ல அல்சல்,கணிப்பு என்றாலும் இந்த ஒரு விடயம் மட்டும் கொஞ்சம் நான் மாறுபடுகிறேன்.

    //ஆர் எஸ் எஸ்ஸிடம் எப்போதுமே எதிர்காலத்திட்டமிடல் என்பது மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கும்.//

    இராமர் கோயிலுக்கு முந்தைய எந்த திட்டமிடலும் வெற்றி பெறவில்லை.ஜனதா கட்சியிலும் பின்புலமாக் இருந்தாலும் அது மிக குறைந்த கால வெற்றி மட்டுமே.வி.பி சிங்கின் மண்டல் பரிந்துரை சம்யத்தில் சரியாக ஆட்சியை கலைத்ததில் இருந்தே அதன் திட்டமிடல் சரியான பாதையில் செல்லத் தொடங்கியது.

    வாஜ்பாய்,அத்வானி இரட்டைமுகம் காட்டும் பாணி வெற்றி பெற்றது உண்மைதான். அதே பாணி அத்வானி,மோடி விடயத்தில் கை கொடுக்குமா?? எனப் பார்க்க வேண்டும். இவை அனைத்துமே பா.ஜ.க தனித்தே 150 பாராளுமன்ற இடங்களைக் கைப்பற்றினால் மட்டுமே!!

    உ.பி ல் வாய்ப்பு குறைவு,

    பீஹார் ல் நிதிஷ்குமார், வங்காளம் மம்தா ஒரிசா நவீன் பட்நாயக் ஆதரிப்பாரா?

    மஹாராஷ்ட்ரா எந்த சிவசேனா[உட்தவ்,ராஜ்) பலம் பெறும்?

    தென் மாநிலங்கள் எடியூரப்பாவிற்கு பிறகு ம்கூஉம் கூட்டணி தயவு கிடைக்குமா??

    இராஜஸ்தான்,குஜராத்,மத்தியப் பிரதேஷ்,ஜார்க்கண்ட்,உத்திராஞ்சல் சரிதான்

    அனைத்தும் பெற வேண்டிய 150 இடங்களில் அடங்கி இருக்கிறது!!!

    நன்றி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆர் எஸ் எஸ் அரசியல் ரீதியான வெற்றியை நீங்கள் கூறுவது போல் பிந்தைய காலத்தில் பெற்றிருக்கலாம். ஆனால் அமைப்பு ரீதியாக ஏற்கனவே குறிப்பாக வட மாநிலங்களில் வலுவாக காலூன்றி இருந்தது அதன் பிந்தைய அரசியல் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

      //அனைத்தும் பெற வேண்டிய 150 இடங்களில் அடங்கி இருக்கிறது!!//

      தங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

      நீக்கு
  2. hahahaha.....good joke orticle. i thing this story will reduce your stuff...? god will give you a 'NALLA PUTTHI & NALLA ARIVU' - azifair-sirkali.blogspot

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் விமர்சனத்தில் உணர்ச்சிகள் தெரிகிறது. ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை. அப்புறம் தங்களின் ஆசீர்வாதங்களுக்கு எனது நன்றிகள்!

      நீக்கு
  3. அப்துல் அஜீஸ் வயிற்றெரிச்சல் நியாமனதே...மோடி வந்துட்டா இவங்க கொட்டமெல்லாம் அடங்கிடும்ல்ல...அப்புறம் நம்ம நாடு அமைதிப்பூங்காவா ஆயிடும்ல்ல

    பதிலளிநீக்கு
  4. இந்தியாவிலேயே இன்றைய அமைதியான மாநிலம் குஜராத்தான் இங்கு காவல் நிலையங்களில் குற்றப் பதிவுகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது.ஒரு இளம்பெண் இரவு 12 மணிக்குமேல் சாலையில் தனியாக பாதுகாப்பாக போகமுடியும் என்றால் அது குஜாராத்தில் மட்டுமே சாத்தியம். இங்கு இரவு முழுவதும் கடைகள் திறந்து வைக்கலாம் எந்த காவல்துறையினரின் கெடுபிடிகளும் இல்லை செக்போஸ்ட்களில் உள்ள காவல் துரையினர் வெளியூர் செல்லவேண்டி பேருந்து கிடைக்காமல் தவிப்பவர்களை வரும் வாகனங்களை விசாரித்து அதில் அனுப்பி வைக்கிறார்கள் காவல்துறையினர் கனிவுடன் நடந்துகொள்கிறார்கள்.

    பதிலளிநீக்கு