வியாழன், 21 ஆகஸ்ட், 2014

இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை இரத்து: நஷ்டம் யாருக்கு?


இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான திட்டமிடப்பட்டிருந்த வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தை மோடி அரசினால் இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒரு சாரார் ஆதரவும், மற்றொரு சாரார் எதிர்ப்பும் தெரிவித்தும் வருகின்றனர். மோடி அரசின் நடவடிக்கை சரிதானா?
மோடி அரசின் நடவடிக்கை சரிதானா என்ற கேள்வியை கேட்பவர்களுக்கு நாம் கேட்கும் கேள்வி பாகிஸ்தான் அரசின் நடவடிக்கை சரிதானா? என்பதுதான். இந்திய பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் பேச்சு வார்த்தை குறித்து அறிவிப்பு வெளியான பிறகு கடந்த ஒன்பது நாட்களில் பதினோரு தடவை எல்லைகோட்டில் தடையை மீறி இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் காரணமின்றி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆகஸ்டு மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் இந்தியா மீது பதினான்கு தடவை தாக்குதல் நடத்தியுள்ளது. இரு நாடுகளிடையே நட்புறவு என்பது இரு வழிப்பாதை. அது இந்தியாவிற்கு மட்டுமே உரிய ஒருவழிப்பாதையாக எவரும் கருத முடியாது. இரு நாடுகளிடையே அமைதி ஏற்பட, இந்தியா மட்டும் விரும்பினால் போதாது; பாகிஸ்தானும் உண்மையாக அமைதியை விரும்ப வேண்டும்.
இந்திய பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் பேச்சு வார்த்தை ரத்து ஆனதற்கு முக்கிய காரணமாக இந்தியா கூறுவது இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பசித் காஷ்மீர் பிரிவினைவாதிகளை சந்திக்க இருந்ததுதான். பாகிஸ்தான் தூதரின் இச்செயல் மரபுக்கு மாறானது என்று இந்தியா கருதியது. எனவே பாகிஸ்தான் தூதர் காஷ்மீர் பிரிவினைவாதிகளை சந்தித்தால் அது இந்திய பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் பேச்சு வார்த்தையை பாதிக்கும் என இந்தியா முதலிலேயே பாகிஸ்தானை எச்சரித்தது. ஆனால் பாகிஸ்தான் தூதர் இந்தியாவின் எச்சரிக்கையை மீறி டெல்லியில் காஷ்மீர் பிரிவினைவாதிகளை சந்தித்தார். மேலும் தான் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை சந்தித்தது வழக்கமாக நடைபெறும் ஒரு நடைமுறைதான் என்றும் தெரிவித்தார். பாகிஸ்தான் தூதர் கூறிய கருத்து சரியானதுதான். இதற்கு முன்பு பாகிஸ்தான் தூதர்கள் பலமுறை காஷ்மீர் பிரிவினைவாதிகளை இந்தியாவில் சந்தித்து பேசியுள்ளார்கள். அப்போதெல்லாம் ஆட்சியில் இருந்த அரசுகள் பாகிஸ்தானை கண்டித்து அறிக்கை விடுவதுடன் அந்த விவகாரத்தை முடித்துவிடும். இப்போது உள்ள மோடி அரசும் அதே போல் நடந்து கொள்ளும் என்று பாகிஸ்தான் அரசு நினைத்தது தவறாகிப் போனது. இந்தியாவின் அதிரடி நடவடிக்கை உண்மையிலேயே பாகிஸ்தான் எதிர்பாராதது ஆகும்.
அடுத்ததாக பேச்சு வார்த்தை இரத்தானது இந்தியாவுக்கு பெரும் இழப்பு எனவும், இந்தியா நல்ல வாய்ப்பை தவற விட்டுவிட்டது எனவும் சிலரால் கூறப்படுகிறது. அவர்கள் கடந்த அறுபத்தெட்டு ஆண்டுகளாக இந்தியா பாகிஸ்தான் பேச்சு வார்த்தைகளினால் விளைந்த பலன்கள் என்ன என்று கூறினால் நாம் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். இக்காலக்கட்டத்தில் இந்தியா பாகிஸ்தானுடன் மூன்று போர்களை சந்தித்ததுதான் உண்மையில் நாம் கண்ட பலன். உண்மையில் நடக்க இருந்த பேச்சு வார்த்தையினால் அதிக அளவில் பயன் பெற்றிருக்கக்கூடிய நாடு பாகிஸ்தான்தான்.
நவாஸ் ஷரிப்பின் அரசு உள்நாட்டு பிரச்சினைகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. வேலை இல்லா திண்டாட்டம் மற்றும் மின் பற்றாக்குறை பாகிஸ்தான் ஆட்டிப் படைத்து வருகிறது. மேலும் இம்ரான்கான் கட்சியும், இஸ்லாமிய மதகுரு கத்ரி ஆதரவாளர்களின் போராட்டங்களை சமாளிக்க முடியாமல் NAVAAZ ஷரிப் திணறி வருகிறார். இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவும் உண்டு என்றும் நம்பப்படுகிறது. நவாஸ் அரசு பாகிஸ்தான் மக்களிடையே நம்பிக்கையை விரைவாக இழந்து வருகிறது. எனவே உள்நாட்டு பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப ஷரிப் காஷ்மீர் பிரச்சினையை கையில் எடுக்க நினைத்தார். காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை சந்திப்பதன் மூலம் தனக்கு எதிரான பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளை வேறு பக்கம் திருப்ப நினைத்தார். ஆனால் அவரது முயற்சி இந்திய அரசின் நடவடிக்கையினால் தகர்ந்து விட்டது.  மேலும் பேச்சு வார்த்தை இரத்து ஆனதின் மூலம் நாவாஸ் ஷரிப் சர்வதேச நாடுகளின் நம்பிக்கையையும் இழந்து விடும் அபாயத்தில் உள்ளார். இந்த பேச்சு வார்த்தை மட்டும் நடந்து இருந்தால் அதைக் காரணம் காட்டி நவாஸ் ஷரிப் அமெரிக்காவிடம் இருந்து பெரும் பண உதவிகளை பெற்றிருப்பார். இப்போது அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
இந்தியாவை பொறுத்தவரையில் வெளியுறவு செயலர்களின் பேச்சு வார்த்தையின் மூலம் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்று நன்றாக உணர்ந்திருந்தது. இப்போது பேச்சு வார்த்தைகளில் கவனம் செலுத்துவதை விட வரப்போகும் காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தனது கவனத்தை செலுத்த மோடி அரசு நினைத்தது. ஏற்கனவே வாஜ்பாய் அரசும், மன்மோகன் அரசும் காஷ்மீர் தேர்தலை வெற்றிகரமாக நடத்திக்காட்டியுள்ளது. எனவே காஷ்மீர் தேர்தலை வெற்றிகரமாக நடத்தாமல் போனால் அது மோடி அரசுக்கு சர்வதேச அளவிலும், உள்நாட்டு அளவிலும் பெரும்தோல்வியாக கருதப்படும். அதுமட்டுமில்லாமல் காஷ்மீரில் தேர்தலை குலைக்க எப்போதுமே பாகிஸ்தான் கடும் முயற்சி செய்யும். இந்த தேர்தலிலும் அதற்கான முயற்சிகளை பெரும் அளவில் பாகிஸ்தான் கண்டிப்பாக செய்யும். இந்த நிலையில் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தத் தேவையில்லை எனக்கருதிய இந்தியா பேச்சுவார்த்தையை இரத்து செய்ய தக்க தருணத்திற்காக காத்திருந்தது. பாகிஸ்தான் தூதர் ஏற்படுத்திக்கொடுத்த வாய்ப்பை இந்தியா உடனடியாக பயன்படுத்திக்கொண்டது.

வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இரத்து ஆனதில் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க லாபமோ அல்லது நஷ்டமோ இல்லை. ஆனால் உள்நாட்டு பிரச்சினைகளில் இருந்து பாகிஸ்தான் மக்களை திசை திருப்ப காஷ்மீர் பிரச்சினையை பயன்படுத்த நினைத்த நவாஸ் ஷரிபின் திட்டம்தான் இந்தியாவால் தகர்க்கப்பட்டுவிட்டது. இந்த பேச்சு வார்த்தை இரத்து ஆனதற்கு யாரும் வருத்தப்பட தேவையில்லை. நவாஸ் ஷரிபை தவிர.
More than a Blog Aggregator

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

இஸ்ரேலின் நட்புக்காக பாலஸ்தீனத்தை கைகழுவும் இந்தியா - காரணம் என்ன?

கடந்த காலங்களில் இந்தியா எந்த அளவிற்கு இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்தது என்பது வரலாற்றை திரும்பி பார்த்தோமானால் நமக்கு நன்கு புரியும். 1947ல் இஸ்ரேல் என்ற நாடு உருவாவதற்கு எதிராக ஐநா சபையில் இந்தியா வாக்களித்தது. ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய அரசு,  இஸ்ரேல் ஐநா சபையில் உறுப்பினராக சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1949ல் வாக்களித்தது. அப்போது இஸ்ரேலில் தூதரகம் அமைப்பதற்கு கூட இந்தியா மறுத்துவிட்டது. 1974 ல் Palestine Liberation Organization (PLO) அமைப்பை பாலஸ்தீனியர்களின் பிரதிநிதியாக இந்தியா அங்கீகரித்தது. அவ்வாறு அறிவித்த முதல் இஸ்லாம் சாராத நாடாக இந்தியா இருந்தது. அக்காலத்தில் இனவெறி கொள்கை கொண்டிருந்த தென்னாப்பிரிக்காவை எந்த அளவுக்கு இந்தியா வெறுத்து ஒதுக்கியதோ அந்த அளவிற்கு இஸ்ரேலை வெறுத்து ஒதுக்கியது இந்தியா. கிட்டத்தட்ட 1992 வரை இதே வெளியுறவு கொள்கையைத்தான் இந்தியா கொண்டிருந்தது.
இந்திய இஸ்ரேல் நாடுகளின் நட்புறவு இப்போது எந்த நிலையில் உள்ளது என்று நீங்கள் கேள்வி கேட்டால் உங்களுக்கு இதுதான் எனது பதில். ரஷியாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவிற்கு அதிக அளவில் ஆயுதம் ஏற்றுமதி செய்வது இஸ்ரேல்தான். கடந்த காலங்களில் இஸ்ரேலுக்கு எதிராக இந்தியாவில் ஏராளமான  போராட்டங்கள் நடை பெறுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராடுவது என்பது காலத்திற்கு ஒவ்வாததாகவும், தேச நலனுக்கு எதிரானதாகவும் இந்தியாவில் கருதப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
காசாவில் நடைபெறும் தாக்குதல்களை கண்டித்து இஸ்ரேலுக்கு எதிராக சமீபத்தில் ஐநா சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததை சிலர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாடாக சிலர் கருதலாம். ஆனால் அத்தீர்மானத்திற்கு ஆதரவான இந்தியாவின் வாக்கு வெறும் சம்பிரதாயமான ஒன்றுதான். ஏனென்றால் இந்திய பாராளுமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக சில எதிர்கட்சிகள் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று முயற்சி செய்தபோது பாஜக அரசு தொடக்கத்திலேயே அதை முறியடித்துவிட்டது என்பதை நாம் இங்கு நினைவு கூறவேண்டும். இதுவரை இஸ்ரேலுடன் கொண்டிருந்த நட்பை மறைமுகமாக ஒப்புக்கொண்டிருந்த இந்திய அதிகாரிகள் கூட  இப்போது அதை வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துள்ளனர். ஏனென்றால் பாலதீனதிற்கு ஆதரவாக இருக்கிறோம் என்பதை விட இஸ்ரேலுடன் வளர்ந்து வரும் ராணுவ நட்புறவு என்பது இந்தியாவிற்கு தற்போது முக்கியமாக உள்ளது. 

இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் நிகழ்ந்தது எப்போது? சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகுதான் இந்தியாவின் பார்வை இஸ்ரேல் பக்கம் திரும்பத் தொடங்கியது எனலாம். நேருவின் அணி சேராக் கொள்கை இந்தியாவிற்கு எந்த பலனையும் தராது என்பதை அக்காலக்கட்டத்தில் உணர்ந்து கொண்ட இந்தியா அதன்பின் அமெரிக்காவிடம் நெருக்கம் காட்டத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இஸ்ரேலுடனும் இந்தியாவின் உறவு மேம்படத் தொடங்கியது. இஸ்ரேலுடனான இந்தியாவின் நெருக்கம் மோடி அரசினால் ஆரம்பிக்கப்பட்டதல்ல. அது கிட்டத்தட்ட 1992ல் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் தொடங்கியது. இரு நாடுகளிடையே தூதரக அளவிலான உறவுகள் மலரத் தொடங்கியது அந்தக் காலக்கட்டத்தில்தான். இவ்விரு நாடுகளுக்கிடையேயான உறவானது கொள்கை ரீதியானது அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இவ்விரு நாடுகளின் தேவைகளை அடிப்படையாக கொண்டே இந்த நட்புறவு  செழிப்பாக வளர்ந்து வருகிறது. இருப்பினும் சில கருத்து வேறுபாடுகளும் உண்டு. ஈரான் உடனான இந்தியாவின் நட்பு இஸ்ரேலுக்கு நெருடலாக உள்ளது. அதேபோல் சீனா உடனான இஸ்ரேலின் நட்பு இந்தியாவிற்கு நெருடலாக உள்ளது. அதே சமயத்தில் எந்த கருத்து வேறுபாடும் இந்த நட்புறவை பாதிக்கக் கூடாது என்பதில் இரு நாடுகளும் உறுதியாக உள்ளன. பாலஸ்தீனத்திற்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாடு வெறும் உதட்டளவிலான பேச்சு என்று இஸ்ரேல் நன்றாகவே உணர்ந்துள்ளது.
இஸ்ரேலுடன் இந்தியாவின் நெருக்கம் அதிகரிப்பதற்கு இஸ்ரேலின்  ராணுவ உதவிகளை மட்டும் நாம் காரணமாக கூற முடியாது. அதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. சர்வதேச அளவில் லாப நஷ்டங்களை கணக்கீடு செய்தே ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதில் நியாயம், தர்மம் பார்க்கப்படுவதில்லை. அவ்வாறு நியாயம், தர்மம் பார்க்கும் ஒரு நாடு உள்நாட்டு அளவிலும், சர்வதேச அளவிலும் ஒரு பலகீனமான நாடாகத்தான் காட்சியளிக்கும் என்பது வரலாறு.  அந்த அளவில் பாலஸ்தீனத்தை ஆதரித்ததற்கு இந்தியா பெற்ற பலன்களை நாம் பார்த்தோமானால் அது பூஜ்யமாகத்தான் இருக்கும். உலகளவில் அதிக தொகையில் முஸ்லிம்களை கொண்ட இரண்டாவது நாடு இந்தியா. ஆனால் இந்தியா Organization of the Islamic Conference (OIC) அமைப்பில் பங்கேற்க தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் காஷ்மீர் பிரச்சினையில் எந்த ஒரு இஸ்லாமிய நாடும் இந்தியாவின் நிலைப்பாட்டை இதுவரை ஆதரிக்கவில்லை. இவ்விரு காரணங்களும் இந்தியாவை மிகவும் அதிருப்தி அடையச் செய்துள்ளன. இந்தியாவில் தீவிரவாத செயல்களை நிறுத்தும்படி எந்த ஒரு இஸ்லாமிய நாடும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்காதது இந்தியாவை வெறுப்படையச் செய்துள்ளது. ஆனால் அதே சமயத்தில் காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவிற்கு வெளிப்படையாக தன ஆதரவை தெரிவிக்கும் நாடாக இஸ்ரேல் உள்ளது.
மேலும் இரு நாடுகளும் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. இரு நாடுகளுமே தீவிரவாதத்தினால் மிகவும் பாதிப்புகளை அடைந்தவை. இரு நாடுகளுமே அல் கைதா, ஐஎஸ்ஐஎஸ், லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத குழுக்களின் தாக்குதல் வட்டத்தில் உள்ளவை, எனவே இந்திய இஸ்ரேலிய நட்புறவிற்கு இந்திய மக்களிடையேயும் ஆதரவு பெருகி வருகிறது. இஸ்ரேலிய தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் இறப்பதை அவர்கள் எதிர்த்தாலும், இஸ்ரேலுக்கான ஆதரவு கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது இந்தியர்களிடையே அதிகரித்துள்ளதை நாம் காண முடிகிறது. (உ.ம்.) twitter page “#IndiaWithIsrael”. 2009ல் இஸ்ரேல் வெளியுறவுத் துறையால் மேற்கொள்ளப்பட்ட ஒரு சர்வேயில் 13 நாடுகளை சேர்ந்த 5,215 பொதுமக்கள் பங்கேற்றனர். சர்வேயின் முடிவில் இஸ்ரேலின் மிகச் சிறந்த நண்பராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது. உலகிலேயே அதிக பட்சமாக 58 சதவீத இந்தியர்கள் இஸ்ரேலின் நிலைப்பாட்டை ஆதரித்தது சர்வேயில் தெரியவந்தது.  

எவ்வாறு இருப்பினும் காங்கிரஸ் ஆட்சி காலத்தைவிட மோடி ஆட்சியின்போது இவ்விரு நாடுகளின் நட்புறவு மேலும் வேகமாக வளரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுஷ்மா சுவராஜ் இஸ்ரேலின் மிகப்பெரும் ஆதரவாளர். இந்தியாவின் நம்பிக்கையான கூட்டாளி என இஸ்ரேலை அவர் பாராட்டியது இங்கு குறிப்பிடத்தக்கது. அவர் 2006 முதல்  2009 வரை Indo-Israel Parliamentary Friendship Group என்ற அமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளது இங்கு நினைவு கூறத்தக்கது. மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். குஜராத்தில் மிகப் பெரும் அளவில் முதலீடு செய்த நாடுகளில் ஒன்று இஸ்ரேல் ஆகும். தெற்காசியாவில் இஸ்ரேலின் மிகச் சிறந்த நண்பன் மோடி தலைமையிலான இந்தியா என்று International Business Times  பத்திரிக்கை கூறுகிறது. பாரதிய ஜனதா கட்சியிலும் சரி. ஆர் எஸ் எஸ் அமைப்பிலும் சரி. இஸ்ரேலுடன் கொண்டுள்ள நட்புறவை வலுவாக்க மிகப் பெரும் ஆதரவு உள்ளது. எனவே வரும் காலங்களில் இந்திய இஸ்ரேலிய நாடுகளின் நட்புறவு ஏறுமுகமாகவே இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
More than a Blog Aggregator

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

இந்தியாவின் மோஸ்ட் வான்டட் குற்றவாளி தாவூத் இப்ராஹீம் எங்கே?



இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தங்கள் அரசு தாவூத் இப்ராஹிமை கைது செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும், விரைவில் அவனை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் எனவும் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை வழக்கம் போல சம்பிரதாயமானதா? அல்லது நிஜமாக நடக்கக்கூடியதா?.  தாவூத் இப்ராஹீம், இந்தியாவின் மோஸ்ட் வான்டட் குற்றவாளி. 1993 ல் நடந்த மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளி. கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக தாவூத்தின் சட்ட விரோத  நெட்வொர்க் செயல்பட்டு வருகிறது. தொடக்கத்தில் கடத்தலில் மட்டுமே ஈடுபட்டுக்கொண்டிருந்த தாவூத்தின் நெட்வொர்க், தற்போது தீவிரவாத நடவடிக்கைகளிலும், தீவிரவாத அமைப்புகளுக்கு பண உதவி செய்வதிலும் ஈடுபட்டு வருகிறது. தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் வசித்து வருவதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. பாகிஸ்தானோ தொடர்ந்து இதனை மறுத்து வருகிறது. தாவூத் பாகிஸ்தானில் இருக்கிறானோ இல்லையோ, தாவூத் பிரச்சினை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடையே உள்ள உறவை பாதித்து வரும் ஒரு காரணியாக உள்ளது.

1993 மும்பை குண்டுவெடிப்புக்குப் பின் தாவூத் இந்தியாவை விட்டு வெளியேறினான். அதன் பின் அவன் இந்தியாவிற்கு வரவே இல்லை. அவன் இந்தியாவை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட இருபது வருடங்கள் ஆயிற்று. அவன் பாகிஸ்தானில் கராச்சி நகரில் தலைமறைவாக வசித்து வருகிறான் என்று இந்தியாவால் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவின் குற்றச்சாட்டை மறுக்கும் பாகிஸ்தான், மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் ஒத்துழைக்க தொடர்ந்து மறுத்து வருகிறது. தாவுத் பாகிஸ்தானில் வசிக்கும் முகவரியை துல்லியமாக இந்திய அரசு தெரிவித்த போதிலும், பாகிஸ்தான் தொடர்ந்து அவன் பாகிஸ்தானில் இல்லை என மறுத்து வருகிறது. தாவூத்தை தேடப்படும் குற்றவாளியாக ஐநா சபை அறிவித்துள்ள போதிலும் பாகிஸ்தான் தொடர்ந்து அவனை காப்பாற்றி வருகிறது. 

தாவூதின் கராச்சி வீடு
இதற்கிடையே கராச்சியில் வசித்து வந்த தாவூத், ஒசாமா மீதான அமெரிக்க அரசின் நடவடிக்கை போல தன்மீது மோடி அரசு கமாண்டோ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற அச்சத்தில்  பாகிஸ்தான்-ஆப்கன் எல்லையில் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு தன் இருப்பிடத்தை மாற்றிவிட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன, அவன் பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் பூமிக்கு அடியில் (Under ground) பங்களாவில் வசித்து வருவதாகவும் ஒரு சாரார் நம்புகின்றனர். தாவூத் தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றி விட்டதாக ஒரு சாரார் கூறி வருகின்றனர். தாவூத்தின் பாதுகாப்பு பொறுப்பை பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐஸ்ஐ ஏற்றுள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தாவூதின் முன்னாள் கூட்டாளியும், தற்போதைய பரம எதிரியுமான சோட்டா ராஜன் ஆஜ் தக் தொலைக்காட்சிக்கு அளித்த தொலைபேசி பேட்டியில் தாவூத் முன்பு கராச்சியில் தங்கி இருந்தபோது தன்னுடைய ஆட்களை அனுப்பி அவனை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், ஆனால் திட்டத்தை முன் கூட்டியே அறிந்துகொண்ட தாவூத் தன்னுடைய பயண திட்டப்படி குறிப்பிட்ட இடத்திற்கு வரவில்லை எனவும், எனவே தன்னுடைய ஆட்கள் அவனை கொலை செய்ய முடியாமல் திரும்பி விட்டனர் என்றும் தெரிவித்தான். மேலும் சோட்டா ராஜன் கூறும்போது தனக்கு கிடைத்த தகவலின்படி தற்போது தாவூத் ஐக்கிய அரபு நாடுகளில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். சோட்டா ராஜனின் கருத்து இந்திய அரசின் கருத்துக்கு எதிராக அமைந்துள்ளது. எப்படி இருந்தாலும் குறிப்பிட்ட ஒரு காலக் கட்டத்தில் தாவூத் பாகிஸ்தானில் வசித்து வந்துள்ளது உறுதியாகிறது.

பாகிஸ்தான் தொடர்ந்து தாவூத் குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறி வருகிறது. எடுத்துக்காட்டாக, 2013-ல் நவாஸ் ஷெரிப்பின் சிறப்பு தூதுவர் ஷரியர் கான் தன்னை மீறி ஒரு உண்மையை உளறிவிட்டார். ஒரு பேட்டியில் அவர் தாவூத் பாகிஸ்தானை விட்டு விரட்டியடிக்கப்பட்டு விட்டார்  என தெரிவித்தார். இதன் மூலம் 1993 குண்டு வெடிப்புக்குப் பின் குறிப்பிட்ட ஒரு காலத்தில் தாவூத் பாகிஸ்தானில் வசித்து வந்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் தான் கூறியதின் அர்த்தத்தை புரிந்துகொண்ட அவர் சுதாகரித்துக் கொண்டு அடுத்த நாளே தனக்கு தாவூத் பற்றி எந்த தகவலும் தெரியாது என்று . பல்டியடித்தார். மேலும் அவர், தாவூத் ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். தாவூத் பாகிஸ்தானை விட்டு விரட்டியடிக்கப்பட்டது உண்மையானால், அவன் பாகிஸ்தானில் இருக்கும்போது ஏன் இந்தியாவிற்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பது இந்திய அரசின் கேள்வி.

2013 ஆகஸ்டில் இந்திய நேபாள எல்லையில் கைது செய்யப்பட அப்துல் கரீம் டுண்டா என்ற லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி தான் ஒரு வருடத்திற்கு முன்பு தாவூத் இப்ராஹிமை கராச்சியில் சந்தித்ததாக விசாரணையில் தெரிவித்தான்.  டுண்டா 1993 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மற்றொரு முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தலைவர்களின் அறிக்கைகளை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள முடியாது. அவற்றிக்கு நம்பகத் தன்மையும் கிடையாது. அவர்கள் தாங்கள் இன்று கூறிய கருத்தை எவ்வித கூச்சமும் இல்லாமல் மறுநாளே மறுப்பார்கள். பாகிஸ்தான் அதிகாரிகளின் அறிக்கைகளை மொத்தமாக எடுத்துப் பார்த்தால் அவை முரண்பாடுகளின் ஒட்டுமொத்த உருவம் என்பது அனைவருக்கும் புரியும். ஒசாமா பின்லேடன் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக பாகிஸ்தானில்தான் வசித்து வந்தார். அமெரிக்காவால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே பாகிஸ்தான் நினைத்தால் அது யாரை வேண்டுமானாலும் மறைத்து வைக்க முடியும். அதில் ஆச்சரியமில்லை.
 
தாவூத் இன்டர்போல் அமைப்பால் தேடப்படும் ஒரு குற்றவாளி. அவனின் இருப்பிடம் தெளிவாக தெரிந்த பின்னும் இந்தியாவால் அவனை கைது செய்ய முடியவில்லை. என்ன காரணம்? இந்த விஷயத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற இந்தியா தவறிவிட்டதுதான் காரணம்.  ஒசாமா பின்லேடனை பிடிக்க அமெரிக்கா எடுத்த நடவடிக்கை போல் இந்தியா செயல்பட வாய்ப்பு மிகவும் குறைவு. அது ஒரு போருக்கு கூட இரு நாடுகளையும் இழுத்துச் சென்றுவிடலாம். ஆனால் சர்வதேச நாடுகளின் ஆதரவை  பெறுவதின் மூலம் அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கக்கூட இந்தியாவிற்கு வாய்ப்பு உள்ளது.  அத்தகைய நடவடிக்கையை  மேற்கொள்ள முடியாது எனில், பாகிஸ்தான் மீதான சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை இந்தியா அதிகரிக்கச் செய்ய வேண்டும். எந்த நடவடிக்கையாக இருந்தாலும் சர்வதேச நாடுகளின் ஆதரவு இன்றி தாவூத்தை இந்தியாவிற்கு கொண்டு வரமுடியாது. ஆனால் துரதிருஷ்டவிதமாக கடந்த இருபது ஆண்டுகளாக சர்வதேச நாடுகளின் ஆதரவை பெறும் விஷயத்தில் இந்தியா வெற்றி பெற இயலவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

More than a Blog Aggregator

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

இராமநாதபுரம் ISIS டி ஷர்ட் விவகாரம்: காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்தது ஏன்!

படம்: NDTV.COM
 இராமநாதபுரத்தில் 26 முஸ்லிம் இளைஞர்கள் ISIS (Islamic State of Iraq and Syria) என்ற முத்திரை பதித்த டி ஷர்ட் அணிந்து எடுத்த குருப் போட்டோ பேஸ்புக்கில் வெளியானது பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளது.  இதுபோன்ற ISIS  அமைப்பினை விளம்பரப்படுத்தும் பொருட்கள் இணையத்தில் நிறைய விற்கப்படுகின்றன. முதன்முதலாக இதுபோன்ற பொருட்களின் விற்பனை இந்தோனேசியாவில் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.  இன்று உலகம் முழுவதும் இதுபோன்ற பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. ISIS முத்திரை பதித்த எந்த பொருளாக இருந்தாலும் இணையத்தில் அறிமுகமானதும் அவைகள் உடனடியாக விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. எனவே தமிழ் நாட்டில் சிலர் ISIS அமைப்பை ஆதரிக்கும் நோக்கில் ஆடை அணிந்ததை உலகம் முழுவதும் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு சம்பவத்தின் தொடர்ச்சியாகவே காண முடிகிறது. எனவே இந்தியாவில்  நடந்த இந்த சம்பவத்தில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆயினும் சம்பவம் நடந்திருப்பது தமிழ் நாட்டில் என்பதால் இந்த சம்பவம் சற்று எச்சரிக்கையுடன் காவல்துறையால் கையாளப்படுகிறது. ஏனென்றால் ISIS  அமைப்பில் உறுப்பினராக சேர்ந்த முதல் இந்தியர் ஹாஜா பக்ருதீன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்தான்.

இராமநாதபுரத்தில் நடந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் திருப்பூரில் உள்ள ஒரு கம்பெனியில் 100 எண்ணிக்கை ஆர்டர் கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டுள்ளது.  அவைகள் ரூ.250  என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 26 பேர் குறிப்பிட்ட டி ஷர்டை அணிந்து இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள ஒரு மசூதியின் முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டது. வெளியிட்டவர் தற்போது இந்தியாவில் இல்லை. அவர் வெளிநாடு சென்றுவிட்டார். அந்த புகைப்படமும் வெளிநாட்டிலிருந்துதான் அப்லோட் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் அப்துல் ரஹ்மான் மற்றும் ரிள்வான் என்ற இரு இளைஞர்கள் தீவிரவாதத்தை ஊக்குவித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற இளைஞர்கள் விசாரணைக்குப்பின் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரவாத அமைப்புகளுக்கு தமிழ் நாட்டில் அதிகரித்து வரும் ஆதரவு காவல்துறைக்கு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. எனவே இது போன்ற சம்பவங்களை முளையிலேயே அழித்துவிட காவல்துறை விரும்புகிறது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை விரும்புகிறது.  ஆனாலும் இவ்வழக்கை பொறுத்தவரையில் காவல்துறை மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் ISIS அமைப்பானது இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பல்ல.

சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஆர்வக்கோளாரில் இதைச் செய்திருக்கலாம். விசாரணையின் போது இருவரும் தாங்கள் எந்த வித வன்முறை நோக்கத்துடனோ அல்லது பதட்டத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலோ இதை செய்யவில்லை என தெரிவித்துள்ளனர். ஆனாலும் இச்சம்பவங்களை தொடக்கத்திலேயே தடுக்காவிட்டால் பின்னர் அது காட்டுத் தீயாக பரவிவிட வாய்ப்புள்ளதாக காவல்துறை நினைக்கிறது. இந்தியாவிலிருந்து இதுவரை 250 பேர் ISIS அமைப்பில் உறுப்பினராக சேர்ந்துள்ளதாகவும், அதில் 18 பேர் ஈராக் சென்றுள்ளதாகவும்உளவுத்துறை நம்புகிறது.

கைது செய்யப்பட இருவரில் ரஹ்மான் என்பவர் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வந்துள்ளது காவல்துறைக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தும் செய்தியாக உள்ளது.  ஏனெனில் ISIS அமைப்பு தனது படைக்கு ஆள் சேர்க்கும் மையமாக சிங்கப்பூரை தேர்ந்தெடுத்து செயல்பட்டுவருகிறது. ISIS அமைப்புக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஓரிரு மாதங்கள் சிங்கப்பூரில் தங்க வைக்கப்பட்டு அதன் பின்னரே ஈராக் அல்லது சிரியாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். தமிழ் நாட்டிலிருந்து ISIS அமைப்பில் சேர்ந்த ஹாஜா பக்ருதீன் சிங்கப்பூர் வழியாகவே ஈராக்குக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று உளவுத்துறை உறுதி செய்துள்ளது. எனவே காவல் துறை இந்த சம்பவத்தை ஒரு சாதாரண சம்பவமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. எடுத்துக்கொள்ளவும் முடியாது. ஆனால் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் எதிர்காலம்!? அவர்கள் தீவிரவாத நோக்கத்துடன் இச்செயலை செய்திருந்தால்  செய்திருந்தால் தண்டனைக்கு உரியவர்கள்தான். ஆனால் ஆர்வக்கோளாரில் செய்திருந்தால்?. இச்சம்பவம் இளைஞர்களின் ஆர்வக்கோளாறால் நடந்ததாகவே நான் உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் அவர்களின் உண்மையான நோக்கம் தீவிரவாதமாக இருந்திருந்தால் சம்பவத்தில் ஈடுபட்ட 26 பேரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. ஆனாலும் இந்த இளைஞர்கள் ஒரு தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் என்ற வகையில் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

இன்றைய இளைஞர்களுக்கு மற்றவர்களின் கவனத்தை கவர வேண்டும் என்ற ஆவல் வெகுவாக உள்ளது. அவர்கள் மனிதக்கடலில் அடையாளமின்றி காணாமல் போக விரும்புவதில்லை. மற்றவர்களின் கவனத்தை எப்போதும் தன் மீது ஈர்க்க எந்த வித்தியாசமான செயலையும் செய்ய அவர்கள் துணிகிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழியானது சமுதாயத்திற்கும், தன்னுடைய குடும்பத்திற்கும் சந்தோஷத்தை தருவதாக இருக்கவேண்டும். ஆனால் இந்த இளைஞர்கள் ஆர்வக்கோளாறில் தேர்ந்தெடுத்த வழியானது கண்டிப்பாக சமுதாயத்திற்கும், அவர்களுடைய குடும்பத்திற்கும் சந்தோஷத்தை தராது. சொல்லப்போனால் அந்த இளைஞர்களுக்கே சந்தோஷத்தை தராது என்பதை வரப்போகும் காலங்கள் உணர்த்தும். ஆனால் இச்சம்பவம் இவர்களைப் போன்ற இளைஞர்களுக்கு நல்லதொரு படிப்பினையைத் தந்துள்ளது.  


More than a Blog Aggregator